tamilnadu

குடிநீர் பிரச்சனைக்கு போராடி தீர்வு!

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கலித்திரம்பட்டு கிராம மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் மஞ்சள் நிறமாக மாறியது. கிராம மக்களின் நலனில் அக்கறை கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்ட கிராம மக்களை ஒன்று திரட்டி, சிபிஎம் கிளை தோழர்கள் ஒன்றிய குழு உறுப்பினர் எம்.ஐயப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சாரங்கன், ஒன்றியச் செயலாளர் கே.குப்புசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.சௌந்தரராஜன், வீரமணி, கிளைச் செயலாளர் ஏ.கோவிந்தன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.ஏழுமலை, டி.ஆனந்தபால், சி.ராஜசேகர், கே.உலகநாதன், எஸ்.ராஜவேல், கே.ராஜேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். குடிநீரில் கலப்படம் இருப்பதை உறுதி செய்து, உடனடியாக கிராம மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தனர்.

அதேபோல, புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள பி.எஸ்.பாளையத்தில் கோடை காலத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியால் இரண்டு மாதத்திற்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. ஏழு நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. மின் மோட்டார் பழுதானதும் பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தியது. குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்ட கிராம மக்கள் சிபிஎம் தலைமையில் காலிக்குடங்களுடன் திருக்கனூர்-புதுச்சேரி சாலையில் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கட்சியின் பகுதி செயலாளர் ஆர்.அன்புமணி தலைமையிலான போராட்டத்தை தொடர்ந்து, அதிகாரிகள் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்தனர். பின்னர் மின் மோட்டார் சரி செய்யப்பட்டு தினசரி குடிநீர் விநியோகம் முறைப்படுத்தப்பட்டது.