கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலக முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் உ.வாசுகி தனது டுவிட்டர் பக்கத்தில் கள்ளக்குறிச்சி மாணவி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு இன்று டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டத்தை மாதர் சங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் வீட்டுக்கு நள்ளிரவு சென்று போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என காவல்துறை மிரட்டியிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் மோகனாவை இன்று காலை வீட்டில் இருந்து கிளம்பும்போது வீட்டு வாசலில் வைத்து கைது செய்துவிட்டது.
கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் சென்னையில் எங்கே இருக்கிறார் என சல்லடை போட்டு தேடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து செய்யப்பட்டு இருந்த வாகன ஏற்பாடுகளை எல்லாம் வாகன உரிமையாளர்களை மிரட்டி ரத்து செய்ய வைத்து விட்டனர். சரி ரயிலில் கிளம்பலாம் என சிதம்பரத்தில் மாதர் சங்க உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் ரயில் நிலையம் சென்றபோது அவர்களோடு தகராறு செய்து ரயில் ஏறவிடாமல் காவல்துறை தடுத்துவிட்டது. ஒரு போராட்டம் நடத்துவதால் என்ன குடி முழுகி போகும்?
காவல்துறையின் இத்தகைய மோசமான நடவடிக்கைகள், கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் மேலும் மேலும் சந்தேகங்களை எழுப்புகின்றன. யாரையும் வரவிடாமல் தடுத்தாலும், சொன்னபடி போராட்டம் நடக்கும்."
இதனைத் தொடர்ந்து 100க்கு மேற்பட்ட மாதர் சங்க நிர்வாகிகள் சென்னை டிஜிபி அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வாசுகி இந்த போராட்டத்தில் என்ன தவறு நாங்கள் தீவிரவாதிகளா? கொலை செய்து விட்டு வந்துள்ளோமா? கிரிமினல் குற்றமா? நீதி கேட்ட போராட்டத்திற்கு எதற்கு இத்தனை அலம்பல் ஆர்ப்பாட்டம். இந்த வேகத்தை குற்றவாளிகளை பிடிப்பதில் காவல்துறை காட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.