tamilnadu

வெளிமாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்... மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை....

சென்னை:
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தமிழகத்திலிருந்து இயக்கப்பட்ட ரயில்களுக்கான செலவுத் தொகையில் மத்திய அரசு எந்தப் பங்கையும் செலுத்தவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தெற்கு ரயில்வே பதிலளித்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நடைமுறைப்ப டுத்தப்பட்ட பொது முடக்கக் காலத்தில், தமிழகத்தில் இருந்த ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல 265 சிறப்பு ரயில் கள் இயக்கப்பட்டன. அதற்கான மொத்த செலவு ரூ.34.6 கோடியாகும். இதில் சுமார் 3.54 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று சேர்ந்தனர்.இந்த நிலையில், சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தெற்கு ரயில்வேக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு, தெற்கு ரயில்வே இயக்கிய சிறப்பு ரயில்களுக்கான கட்டணச் செலவில் மத்திய அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.மாநில அரசின் ஏற்பாட்டின் பேரில் புலம்பெயர் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, முன் பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள் மூலம், முற்றிலும் படுக்கை வசதி கொண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.தமிழகத்தில் இருந்துதான் அதிக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது. தெற்கு ரயில்வே இயக்கிய ஒட்டுமொத்த சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 507 ஆக இருக்கும் நிலையில், தமிழகத்தில் இருந்து மட்டும் 50 விழுக்காடு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.