tamilnadu

img

பன்னியாண்டி சமூக மக்களுக்கு எஸ்.சி சான்று: ஆட்சியர் உறுதி

திருவண்ணாமலை, ஜுன் 27- திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பன்னியாண்டி சமூக மக்களுக்கு எஸ்.சி. சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் எம்.இரவி தலைமையில் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு, நிர்வாகிகள் ப.செல்வன், குப்புசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், டி.கே.வெங்கடேசன், இரா.பாரி (சிஐடியு), வழக்கறிஞர் எஸ்.அபிராமன், எம்.பிரகலநாதன் (விதொச) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமூகத்தினர் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்க்க உரிய சாதிச் சான்றிதழ் இல்லாததால் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை உட்பட அரசின் பல்வேறு திட்டங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 1976ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட சட்டத்தின்படி தமிழ்நாட்டிற்கான வகைப்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் பட்டியலில் பன்னியாண்டி சமூகம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2008 – 2010ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பன்னியாண்டி சமூகத்தினருக்கு எஸ்.சி. சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் இந்த சமூகத்தினர் சிரமப்படுகிறார்கள். எனவே பன்னியாண்டிகள் சமூகத்தினருக்கு எஸ்.சி. சாதிச் சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த ஆட்சியர் க.சு.கந்தசாமி மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்தார். முன்னதாக, வேங்கிக்கால் மின்சாரவாரிய அலுவலகம் அருகிலிருந்து, மாவட்டப் பொருளாளர் எஸ்.ராமதாஸ் துவக்கி வைத்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.