tamilnadu

img

மரக்கன்றுகள் நட ரூ.198 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கான திட்டத்துக்கு ரூ.198 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளில், காமராஜர் சாலையில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் சிலை அருகில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் மரக்கன்றினை நட்டு வைத்து இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் இத்திட்டத்திற்காக 198 கோடியே 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அதில் இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள், பூங்காக்கள், அரசுக்கு சொந்தமான இடங்கள், வனப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் மரங்களை நட்டு வளர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழலை சமன்படுத்தி, பசுமையான சூழலை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 64 லட்சம் மரக்கன்றுகளும், வனத்துறை சார்பில் 7 லட்சம் மரக்கன்றுகளும் நடப்பட்டு அதனை பராமரித்திட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த பணிகளை விரைவில் தொடங்கி குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என ஊரகவளர்ச்சித்துறை  இயக்குநர் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.