tamilnadu

பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட நிலம் விற்பனை: ஆட்சியரிடம் புகார்

கடலூர், ஜூலை 10- கடலூர் ஊராட்சி கூத்தப்பாக்கத்தை சேர்ந்த வை.தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூத்தப்பாக்கத்தில் மொத்தம் 2.80 ஏக்கரில் உள்ளூர் திட்டக்குழு மூலமாக அங்கீகரிக்கப்பட்ட மனை விற்பனை செய்யப்பட்டது. இதில், பூங்கா உட்பட பொதுப்பயன்பாட்டிற்காக 12,420 சதுர அடி நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பூங்காவிற்கான இடம் தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுற்றியுள்ள சுமார் 30 நகர்களுக்கு இந்த இடமே பொதுவான இடமாக இருந்து வந்தது. இதில் நகருக்குத் தேவையான குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சமுதாயக் கூடம் உட்பட பொதுமக்களின் பயன்பாட்டிற்கான பணிகள் மேற்கொள்ளலாம். ஆனால் இடம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி தற்போது சில வீடுகளும் அதில் கட்டப்பட்டுள்ளன. எனவே பூங்கா உள்ளிட்ட பொதுப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தினை பார்வையிட்டு நகர்வாசிகள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.