குதிராம் போஸ் இந்திய விடுதலைப் போராட்டத்தின் இளம் தியாகி. தனது 18-வது வயதில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடி தூக்கிலிடப்பட்டார். சிறையில் இருக்கும்போது, “சித்தியின் வயிற்றில் வளரும் குழந்தை பிறக்கும்போது, அதன் கழுத்தில் தூக்குக் கயிற்றின் தழும்புகள் இருக்கும். நான் மீண்டும் பிறப்பேன்” என்று வீரமுழக்கமிட்டார்.
ஆறு வயதிலேயே பெற்றோரை இழந்த குதிராம், தனது தமக்கையுடன் வளர்ந்தார். 1902-ல் யுகாந்தர் இயக்கத்தில் சேர்ந்து, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார். வங்கப் பிரிவினைக்கு எதிராக போராடினார். கடுமையான தண்டனைகள் வழங்கிய நீதிபதி கிங்ஸ்போர்டை குறிவைத்து குண்டுவீசிய சம்பவத்தில், தவறுதலாக ஒரு ஐரோப்பியப் பெண்மணியும் அவரது மகளும் உயிரிழந்தனர். இதையடுத்து குதிராம் கைது செய்யப்பட்டு 1908 ஆகஸ்ட் 11-ல் தூக்கிலிடப்பட்டார். அமிர்தபஜார் பத்திரிகை, “புன்னகையுடன் மரணத்தை தழுவிய குதிராம்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. இளம் வயதில் உயிர்நீத்த குதிராம், பல தலைமுறை இந்தியர்களுக்கு தியாக உணர்வை ஊட்டினார். இன்றைய தலைமுறையினர் இத்தகைய தியாகிகளின் வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம்.
- இன்று (டிச.3) குதிராம் போஸ் நினைவு நாள் -