குடியிருப்பு அருகே கல்குவாரி கிராம மக்கள் எதிர்ப்பு
விக்கிரவாண்டி அருகே நங்காத்தூர் கிரா மத்தில் அமைய உள்ள சிலுவை மலை ஏலத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்டது நங்காத்தூர் கிராமம். இந்த கிராமத்தின் குடியிருப்பு பகுதி மிக பழமையான மலை ஒன்று உள்ளது. இந்த மலையின் மேல், பிரசித்தி பெற்ற சிலுவை அமைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் இந்த மலையை சிலுவை மலை என்று அழைத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த மலையில் கல்குவாரி அமைக்க அரசு ஏலம் விட உள்ள தாக தகவல் பரவியது. இது, அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. அந்த மலையில் கல்குவாரி அமைந்துவிட்டால் தினசரி வெடி வெடிக்கும் மற்றும் அதன் மூலம் ஆபத்து மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, நங்காத்தூர் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திங்கட்கிழமை (ஏப்.7) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் சிலுவை மலை ஏலத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.