செங்கல்பட்டு: 90 பேருக்கு தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1624ஆக உயர்ந்துள்ளது. தற்சமயம் மருத்துவமனைகளில் 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம்: 15 நபர்களுக்கு தொற்று
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 15 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 483 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 294 பேர் குணமடைந்துள்ளனர். 8 பேர் உயிரிழந்தனர். 185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர்: 70 பேருக்கு தொற்று
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1191ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 647 பேர் குணமடைந்துள்ளனர். 11 பேர் உயிரிழந்தனர். 533 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே வீட்டில் 10 பேருக்கு கொரோனா
சென்னை மின்ட் பகுதியில் உள்ள கொண்டிதோப்பில் ஒரே வீட்டில் வசித்த வந்த தொழிலதிபர் உள்ளிட்ட அவரது குடும்பத்தை 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆய்வாளருக்கு கொரோனா
சென்னை மேற்குமாம்பலம் காவல்நிலைய ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஏர்போர்ட் அத்தாரிட்டி டிரைவராக பணியாற்றும் குரோம்பேட்டையை சேர்ந்த 45 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வியாபாரிகள் வாகனங்கள் பறிமுதல்
சென்னை கோயம்பேடு அருகே தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் காய்கறி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளிடமிருந்து 5 மினி வேன்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள், அபராதமாக 24 ஆயிரத்து 500 ரூபாயை வசூலித்தனர்.
சென்னையில் 7 பேர் பலி
சென்னையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் உயிரிழந்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பேர், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 2 பேர், கேஎம்சி மருத்துவமனையில் 3 பேர் என 7 பேர் உயிரிழந்தனர்.
பெண் அதிகாரிக்கு கொரோனா
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு பெண் அதிகாரி மற்றும் அவரது உதவியாளருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
5 அமைச்சர்கள் கொண்ட குழு
இந்தியா அளிவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் மும்பை, டெல்லிக்கு அடுத்து 3வது இடத்தில் சென்னை மாநகரம் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளதால், தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து செல்கிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணி, ஒருங்கிணைத்தல், மீட்பு பணிகளை மேற்கொள்ள 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியேர் இடம் பெற்றுள்ளனர்.
குணமானவருக்கு மீண்டும் தொற்று
தண்டையார்பேட்டையை சேர்ந்த 24 வயது இளைஞர் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு கடந்த மே 2 மற்றும் 3ந் தேதிகளில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று நீங்கியது உறுதியானது. இதனையடுத்து அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு 4 நாட்களுக்கு முன்னதாக வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து புரசைவாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குடல்வால் அழற்சி நோயுடன் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தமுறை அவருக்கு கொரோனா தொற்று இருந்த போதும் அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.