வேலூர்:
வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகன் தனது உண்ணாநிலையை முடித்துக் கொண்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் கடந்த 29 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், தனது தாய் மற்றும் உறவினர்களுடன் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதிக்க கோரி கடந்த 25 நாட்களாக சிறையில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வந்தார்.இந்த நிலையில் முருகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி முருகன் கடந்த 15 ஆம் தேதி இரவு சுமார் 7.15 மணிக்கு வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த காவலுடன் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஈ.சி.ஜி., ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்பட உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், முருகன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அன்று இரவு மீண்டும் உடல்நிலை மோசமானதால் 11 மணி அளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் தனது உண்ணாநிலையை தொடர்ந்து வந்தார்.மருத்துவர்கள் ஆலோசனையை தொடர்ந்து இளநீர் குடித்து தனது போராட்டத்தை முருகன் முடித்துக்கொண்டார். பிறகு, மருத்துவமனையில் இருந்து மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.