சென்னை,ஜூன் 2-ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சுப்பிரமணியன் பணி ஓய்வுபெறும் நாளில் பணி ஓய்வுபெறுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொண்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:பணிஓய்வு பெறும் நாளில் ஒரு அரசு ஊழியரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்வது என்பது அரசு விதிகளுக்கு முரணான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறான நடவடிக்கையாகும். ஜாக்டோ- ஜியோவின் மிக முக்கியத்தலைவர்களில் ஒருவரும், கடந்தகால ஜாக்டோ -ஜியோ போராட்டங்களில் மிக முக்கியப் பங்காற்றியவருமாகிய மு.சுப்பிரமணியன் மீதானஇந்நடவடிக்கை கடைந்தெடுத்தபழிவாங்கும் நடவடிக்கையாகும்.பணி ஓய்வு பெறும் நாளில் மு.சுப்பிரமணியன் அவர்களைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்ததன் மூலம் தமிழக அரசு 14 லட்சம்அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அச்சுறுத்தும் செயலில் இறங்கியுள்ளது. இழிவான இச்செயலின் மூலம் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மிகப்பெரும் அதிருப்திக்கு தமிழக அரசு ஆளாகியுள்ளது.பணி ஓய்வுபெறும் நாளில் மு.சுப்பிரமணியன் அவர்களைப் பொய்யான காரணங்களைக் கூறி உள்நோக்கத்துடன் தற்காலிகப் பணிநீக்கம் செய்து அவரது ஓய்வுக்காலப் பலன்களைத் தடுத்து நிறுத்தும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரின் நடவடிக்கையானது மிகவும்கீழ்த்தரமான நடவடிக்கையாகும்.இதுபோன்ற செயல்களின் மூலமாக தமிழ்நாட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அச்சுறுத்திவிடலாம் என்ற தமிழக அரசின் பகல்கனவு ஒருபோதும் பலிக்காது. இந்நடவடிக்கையானது தமிழக அரசிற்கும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கும் இடையே இணக்கமற்ற போக்கையே ஏற்படுத்தும் என்பதைத் தமிழக அரசு புரிந்து கொண்டு உடனடியாக மு.சுப்பிரமணியன் மீதான பழிவாங்கும் தற்காலிகப் பணிநீக்க நடவடிக்கையை ரத்து செய்திட வேண்டும். அதில்காலதாமதம் ஏற்படின் தமிழகம்முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டக்களம் தீவிரமாகும்.ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சுப்பிரமணியன் மீதான தற்காலிகப் பணிநீக்க நடவடிக்கையை எதிர்த்து ஜூன் 3 அன்று மாலை மாவட்டத்தலைநகரங்களில் தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்ட போராட்டங்களில் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள் பங்கேற்று அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.