சென்னை, ஜூலை 25 - மாம்பலம் நெடுஞ்சாலையில் வியாபாரம் செய்யும் பகுதியை பாரம் பரிய சந்தையாக அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவை சந்தித்து, கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
113வது வட்டம், கோடம்பாக்கம் மேம்பாலம் கீழ் மாம்பலம் நெடுஞ் சாலையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோர கடைகள் செயல் பட்டு வருகின்றன. காய்கறி, பழம், பூ, தள்ளுவண்டி உணவகம், தள்ளுவண்டி சலவை கடை போன்ற தொழில்களில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜூலை 19ந் தேதி மாநகராட்சி அதிகாரி வித்யா, காவல்துறை உதவியுடன் புல்டோசர் மூலமாக கடைகளை நொறுக்கி யுள்ளார். சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதாரம் மற்றும் சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) 2014 சட்டத்தின்படி நகர விற்பனை குழு, ‘அங்கீகாரம் அற்ற வியாபார பகுதி’ என அறிவிக்க வேண்டும். அதன் பின்பு, கால அவகாசம், மாற்று இடம் கொடுத்து, உரிய காலம் கடந்தும் கடைகளை மாற்று இடத்திற்கு கொண்டு செல்லாத போதுதான் நடை பாதை கடைகளை அகற்ற வேண்டும்.
இதற்கு மாறாக, நடைபாதை வியாபாரிகளை அச்சுறுத்தி, முன் அறிவிப்பு இன்றி, கடைகளை உடைத்து, பொருட்களை சேதப்படுத்திய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் சட்டத்தின்படி, 50 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்யும் பகுதி களை பாரம்பரிய சந்தையாக வரையறுக்க வேண்டும்.
அதன்படி, மாம்பலம் நெடுஞ்சாலை யில் வியாபாரம் நடைபெறும் பகுதியை பாரம்பரிய சந்தையாக அறிவித்து, நடைபாதை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். பாதிக் கப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட மேயர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்நிகழ்வின் போது கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வெ.இரவீந்திர பாரதி, பகுதி குழு உறுப்பினர்கள் த.சிவகுமார், த. சுரேந்திரன், கிளைச் செயலாளர் அருண் மற்றும் எஸ்.டி.டி மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.