tamilnadu

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் முக்கிய செய்திகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் கட்டணம் பாதியாக குறைப்பு
சென்னை, செப்.30-சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை நடந்து வருகிறது. 2 ஆவது கட்டமாக மாதவரம் - சிறுசேரிக்கு 105 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழித்தடப் பாதை அமைக்கப்படும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் பயணிகளை கவரும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை தினங்களில் மெட்ரோ ரயில் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண சலுகை ஒரு ஆண்டுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை தினங்களில் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது. மெட்ரோ ரயில்களில் வார வேலை நாட்களில் சராசரியாக 1.20 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ஆனால், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை தினங்களில் 70 ஆயிரம் பயணிகள் மட்டுமே பயணம் செய்கிறார்கள். எனவே விடுமுறை தினங்களில் பயணிகள் கூட்டத்தை அதிகரிக்கும் விதமாக 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மெட்ரோ ரயில் பயணிகள் பெரிதும் பயன் பெறுவார்கள்’ என்றார்.

காலமானார்
திருவள்ளூர், செப்.30-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பு.சே. ராஜசேகரின் தாயார் புஷ்பவள்ளி சேகர் திங்களன்று (செப்.30) உடல்நலக்குறை வால் காலமானார். அவருக்கு வயது 80. நாகை மாவட்டம், திருவிளையாட்டத்தில் வைக்கப்பட்டிருந்த புஷ்பவள்ளி அம்மையாரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், தமுஎகச உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சாராயம் விற்பனையை தடுக்க ஆட்சியரிடம் மனு
காஞ்சிபுரம், செப்.30-காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் பரமசிவம் நகர் பகுதியில் கள்ளச்சாராயம் பாக்கெட்டில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:- திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகரில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு இருக்கும் அனை வரும் தினக்கூலி தொழிலாளர்கள். எங்கள் பகுதியில் நாளுக்கு நாள் கள்ளச்சாராயம் அதிகரித்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் பாதித்துள்ளது. மேலும் குடும்ப தகராறுகளும் ஏற்படுவதால், பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்லும் பெண்கள் மிகவும் பாதிக்கிறார்கள். பள்ளிக்கு அருகிலேயே பாக்கெட் சாராயம் விற்கப்படுவதால் இதை குடித்து விட்டு சிலர் பள்ளி வாளகத்திலேயே விழுந்து கிடக்கிறார்கள். இதனால் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுவதுடன் பெண் ஆசிரியர்க ளும் பள்ளிக்கு வர அச்சப்படுகிறார்கள். இதுகுறித்து திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் எங்கள் பகுதியில் சாராயம் மட்டும் இல்லாமல் கஞ்சாவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் உள்ளது.  எனவே சாராயம், கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலமானார்
சென்னை, செப்.30-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மூத்த தலைவர்களில் மறைந்த தோழர் கோவிந்தராஜ் அவர்களின் துணைவியார் வள்ளிநாயகி உடல்நலக்குறைவால் திங்களன்று (செப்.30) வில்லிவாக்கம் திருநகர், 6வது தெருவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அன்னாரது உடலுக்கு மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு செயற்குழு உறுப்பினர்கள், வில்லிவாக்கம் பகுதிக்குழு உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தினர். செவ்வாயன்று (அக்1) காலை 10 மணி அளவில் வில்லிவாக்கம் மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறைந்த வள்ளிநாயகிக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

கல்குவாரியை மூட கோரி  உண்ணாநிலை போராட்டம்
காஞ்சிபுரம், செப்.30- காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் அடுத்த பழவேரி ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.  இந்த கல்குவாரிகளில் பாறைகளை வெடிக்கும் போது சிறு சிறு கல் துகள்கள் விவசாய நிலங்களில் விழுகிறது. மேலும் புழுதிமண்டலமாகவும் காட்சியளிக்கிறது. இதனால் விளை நிலங்கள் அழுந்துவிடும் என விவசாயிகள் அஞ்சுகிறார்கள்.  வெடி வைத்து பாறையை உடைக்கும்போது குடியிருப்புகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், குடியிருப்புகள் எப்போது இடிந்து விழும் என்ற நிலை உள்ளது. மேலும் இறைச்சல் சத்தம் எப்போது கேட்டுக்கொண்டே இருப்பதால் மன ரீதியாக பாதிக்கபடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே விளைநிலங்கள், குடியிருப்பு பகுதியில் உள்ள கல்குவாரியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்  என வலியுறுத்தி கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாநிலைப் போராட்ட த்தில் திங்களன்று (செப்.30) ஈடுபட்டனர்.