கூட்டாட்சி முறையை ஒழிக்கும் நோக்கத்தோடு ஆளுநர் செயல்படுகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
ஆளுநர் மாளிகையில் இருந்து வரும் அழைப்பிதழ்களில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆளுநர் என்று இருக்கும். இப்போது பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழக இலச்சினைக்கு மாறாக, ஒன்றிய அரசின் இலச்சினையை பயன்படுத்தி உள்ளனர். கூட்டாட்சியை ஒழிக்க வேண்டும் என்று நோக்கத்தோடு ஆளுநர் செயல்படுகின்றனர். பிற ஆளுநர்களை விட மோசமான நிலைக்கு சென்றுள்ளார்.
செவிலியர்கள் விவகாரம் தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சருடன் பேசினேன். அப்போது, பணியமர்த்தும்போது அதிமுக அரசு தவறு செய்திருந்தால் அதற்கு செவிலியர்களை பொறுப்பாக்க முடியாது. எனவே, நியாயமான முறையில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த பிரச்சனையில், முதலமைச்சரின் உத்தரவையடுத்து ஆட்சியர் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்த இழிசெயலை செய்த குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈஷா மையத்தில் மர்மமான பல சாவு, கொலைகள் நிகழ்கிறது. பிரதமர், ஒன்றிய உள்துறை அமைச்சர், பாஜக தேசிய தலைவர் உள்ளிட்டோர் அங்கு சென்று வருகின்றனர். ஒன்றிய அரசு ஆதரவு இருப்பதால், எதை வேண்டுமானாலும் செய்யலாம் என செயல்படுகின்றனர். இதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது. எனவே, ஈஷா மையத்தை பூட்டி சீல் வைத்து, விசாரணை நடத்த வேண்டும். ஸ்ரீமதி கொலைக்கு பின்புலமாக இருந்தவர்களை கைது செய்ய வேண்டும். அங்கு நடைபெறுகிற சம்பவங்கள் குறித்து வெளி உலகிற்கு தெரிய படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.