சென்னை:'
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து பேசியதற்காக என்மீது போடப்பட்டுள்ள வழக்கைப் பயன்படுத்தி ஊழலில் திளைக்கும் முதலமைச்சரையும், அதிமுக அரசையும் தோலுரித்துக் காட்டுவேன் என திமுக மக்களவை உறுப்பினர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா ஊழல் வழக்கு குறித்து மக்களவை உறுப்பினர் ஆ. ராசா கடும் விமர்சனங்களை முன் வைத்தார். வழக்கு குறித்து விவாதம் செய்ய முதலமைச்சருக்கு அழைப்புவிடுத்தார். இதனிடையே, ராசாவை விமர்சித்து அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து பேசியதற்காக என்மீது போடப் பட்டுள்ள வழக்கை பயன்படுத்தி ஊழலில் திளைக்கும்
முதலமைச்சரையும், அதிமுக அரசையும் தோலுரித்து காட்டுவேன் என ராசா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் 2ஜி வழக்கு குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதாரமற்ற தான் தோன்றித்தனமான அவதூறுகளை என்மீது சுமத்தினார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாதான் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்றும், அவர் ஊழல் செய்து அடித்த கொள்ளை அரசியல் சட்டத்தின் மீது அவர் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை சிதைத் தது மட்டுமன்றி, ஜனநாயக அரசியலுக்கு அடிப்படையாக விளங்கும் அரசியல் சட்டத்தையே படுகொலை செய்த செயலாகும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆதாரத்தோடு நான் பேசினேன். இதனையடுத்து, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 153 மற்றும் 505ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்பேரில் தமிழ்நாடு காவல்துறை என்மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் தெரிவித்த கடுமையான கண்டனங்கள் குறித்து நான் முதலமைச்சருக்கு எழுதிய திறந்த மடலில் உள்ள எந்த கருத்தையும், வார்த்தையையும் பொய் என்றோ, புனைவு என்றோ மெய்ப்பிக்க வக்கற்ற முதலமைச்சர், தமிழ்நாடு காவல்துறை மூலம் கோழைத்தனமாக இவ்வழக்கை என் மீது தொடுத்துள்ளார்.தமிழ்நாடு காவல் துறை தொடர்ந்துள்ள இவ்வழக் கின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமேயானால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய கண்டன கருத்துகளை விசாரணை நீதிமன்றத்திலேயே உண்மை என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்ற அந்த அடிப்படையில் இவ்வழக்கை வரவேற்று, முதலமைச்சருக்கும், தமிழ்நாடு காவல் துறைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இத்தகைய வழக்குகள் மூலம் என்னை அச்சுறுத்தலாம் என்றோ, என் சட்டப்படியான வாதங்களைத் தடுக்கலாம் என்றோ, முதலமைச்சர் நினைத்தால் அதைவிட அரசியல் அறியாமை ஏதும் இருக்க முடியாது.என்மீது போடப்படும் வழக்கைப் பயன்படுத்தியே ஜெயலலிதா செய்த ஊழலையும், ஜெயலலிதாவை பின்தொடர்ந்து அவரைப் போலவே ஊழலில் திளைக்கும் முதலமைச்சரையும், இந்த அரசையும் தோலுரித்து காட்டுவதோடு விரைவில் அமையவிருக்கும் திமுக ஆட்சியில், இப்போது ஊழலில் திளைக்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக் கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.