tamilnadu

img

கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி

சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய, கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு எஸ்டேட் எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும். விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டுமென, கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் பொன்தோஸ் கடந்த 2007ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதனை எதிர்த்து கோடநாடு எஸ்டேட் மேலாளர் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கோடநாடு எஸ்டேட்டில் எந்த விதி மீறலும் இல்லை எனக்கூறி பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து பஞ்சாயத்து தலைவர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று(07.06.24) இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிடுகையில், கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டிருந்தால் என்ன செய்வது?.. ஆய்வு செய்தால் தானே அது தெரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், கோடநாடு எஸ்டேட்டுக்குள் விதிமீறி எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளவில்லை என தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆய்வு செய்தால் தானே விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா? என தெரியவரும் அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். மேலும், எஸ்டேட்டை ஆய்வு செய்யவும், சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு முழு உரிமை உள்ளதாகக் கூறி, உரிய விதிமுறைகளை பின்பற்றி ஆய்வு செய்யலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து, ஆய்வின் போது நடுநிலையுடன் செயல்பட வேண்டுமெனவும், அங்கிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

;