சென்னை, டிச.27- அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையின் செயல்பாடு கள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரி வித்துள்ளார்.
தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு, ஆலையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று தனியார் தொலைக் காட்சிக்கு அளித்தப் பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
‘‘எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் ஆலைக்கு செவ்வாயன்று (டிச.26) இரவு கப்பலில் இருந்து குழாய் வழியாக அமோனியா நிரப்பும்போது வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டது. தகவலறிந்து 15 நிமிடங்களில் நிலைமையை ஆலை நிர்வாகம் சரி செய்துள்ளது. இருப்பினும், வாயுக்கசிவால் 18 பேர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதியில் இரவோடு இரவாக மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.
அமோனியாவின் அளவு சீராக இருந்ததையடுத்து, விபத்து தவிர்க்கப் பட்டுள்ளது. வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட வர்கள் நலமுடன் இருக்கிறார்கள். வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலை யின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு ஆலையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். கோரமண்டல் தொழிற்சாலை ரெட் கேட்டகிரி தொழிற் சாலை ஆகும்.
வடசென்னை மற்றும் எண்ணூர் பகுதியில் இருக்கின்ற ரெட் கேட்டகிரி தொழிற்சாலை கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதோடு எல்லா தொழிற்சாலைகளிலும் கட்ட மைப்பு சரியாக இருக்கிறதா, விபத்துக்கள் ஏற்படுகின்றபோது அதை தடுப்பதற்கான நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படு கின்றதா, என்பதை கண்காணிக்கவிருக் கிறோம். ஒரு குழுவை அனுப்பி இந்த ஆய்வை மேற்கொள்வோம். தற்போது அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஆலையில் உள்ள சல்பூரிக் ஆசிட் இயந்திரத்தை உடனடியாக நிறுத்த முடியாது என்பதால் மெதுவாக நிறுத்தப் பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை மூலம் எதிர்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை விரைவில் அறிவிக்கிறோம்.
ரெட் கேட்டகிரி தொழிற்சாலைகள் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சரி யாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய விரைவில் ஒரு குழு அமைக்கப்படும். வல்லுநர் களை அனுப்பி இதை பரிசீலிக்க இருக் கிறோம். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை சரி செய்ய வலியுறுத்துவோம். இனிமேல் வடசென்னை பகுதி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் அமைச்சர்.
பசுமை தீர்ப்பாயம் விசாரணை
எண்ணூர் அமோனியா வாயுக்கசிவு விவகாரத்தை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரிக்க வுள்ளது. ஜன.2-இல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அமைச்சர் நலம் விசாரிப்பு
இந்நிலையில், வாயுக் கசிவால் முச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட மக்களை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பொது மக்கள் போராட்டம்
இந்நிலையில், அந்தப் பகுதி மக்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நிவாரணம்-பாதுகாப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை,டிச.27- சென்னை எண்ணூரில் அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
சென்னை, எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் டிசம்பர் 26 அன்று இரவு சுமார் 11.30 மணி அளவில் அளவுக்கு அதிகமாக அமோனியா வாயுவை கடல் வழியாக திறந்து விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் கடல் அலை 4 அடி உயரத்திற்கு எழும்பியதாகவும் தெரிவிக்கிறார்கள். எண்ணூர் பகுதியில் உள்ள பெரிய குப்பம், சின்னக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 18 கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல் மயக்கம் ஏற்பட்டு பெரும் பாதிப்புக்குள்ளாயினர். 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிகிறோம். கடலில் மீன்களும் செத்து மிதக்கின்றன. ஏற்கனவே, பெருவெள்ளத்தின்போது எண்ணெய்க் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டுவருவதற்கு முன்பே இத்தகைய துயரச் சம்பவம் நடந்துள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் விசாரணை நடத்தி, தவறிழைத்த நிர்வாகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உயரிய மருத்துவ சிகிச்சையும், நிவாரணமும் அளித்து உதவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
நிரந்தரமாக மூட மக்கள் கோரிக்கை
மேற்படி, கோரமண்டல் உரத் தொழிற்சாலை யினால் பல்லாண்டு காலமாக இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் போராட்டம் நடத்தும் போது சில நடவடிக்கைகளை மேற்கொள்வதும், பிறகு தொடர்ந்து வாயுக்கசி வால் பாதிப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. தற்போது இத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் அடர்த்தியாக வாழும் குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே இருக்கும் இத்தொழிற்சாலையில் கடந்த காலங்களிலும் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டிருக்கும் நிலை யில் தொழிற்சாலை நிர்வாகம் உரிய பாது காப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தவில்லை என்றும் எனவே, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர்.
எனவே, ஆலை நிர்வாகம், மக்களின் உணர்வுகளை கணக்கில் கொண்டு உரிய பாதுகாப்பை அளித்திட வேண்டுமென்றும், அரசு நிர்வாகங்கள் அதை உத்தரவாதப்படுத்த வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.