tamilnadu

img

இளைஞர்களுக்கு வேலைகொடு:வாலிபர் சங்க சைக்கிள் பிரச்சார பயணக்குழுவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

இளைஞர்களுக்கு வேலைகொடு என்கிற முழக்கத்தோடு பயணிக்கும் வாலிபர் சங்க சைக்கிள் பிரச்சார பயணக்குழுவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

“இளைஞர்களுக்கு வேலை கொடு” என்ற முழக்கத்தோடு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாலிபர்கள் தங்களது 3வது நாள் பிரச்சாரத்தை தொடர்ந்தனர்.

சென்னை, புதுச்சேரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 4 முனைகளிலிருந்து திருச்சி நோக்கி 3000 கி.மீ சைக்கிள் பயணம் ஏப். 21 அன்று தொடங்கியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமையிலான சென்னை குழுவினர் சனிக்கிழமையன்று (ஏப்.23) தென்சென்னை மாவட்டம், கோயம்பேட்டிலிருந்து 3வது நாள் பிரச்சாரத்தை தொடங்கினர்.

இந்த பிரச்சாரத்தை சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சென்னை மாவட்டச் செயலாளர் க.பீம்ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்தக்குழு விருகம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டது. பிரச்சாரக் குழுவினரை ஆட்டோ, முறைசாரா தொழிலாளர்கள், பெண்கள் என பலதரப்பினரும் ஆங்காங்கே நின்று வரவேற்றனர்.

தரமணியில் மும்மதத்தினரும் இணைந்து ஆரத்தி எடுத்து, தேங்காய் உடைத்து வரவேற்பளித்தனர். நரிக்குறவர்கள் வாழை, தர்பூசணி உள்ளிட்ட பழங்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். கிண்டி அருகே இந்திய மாணவர் சங்கத்தினர் மாலை அணிவித்து, பழச்சாறு கொடுத்து வாழ்த்தி முழக்கமிட்டனர்.

சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ச.லெனின், கே.வனஜகுமாரி, பகுதிச் செயலாளர்கள் இ.ரவி (விருகம்பாக்கம்), இ.மூர்த்தி  (தி.நகர்), ஜி.வெங்கடேஷ் (சைதை), எஸ்.முகமது ரஃபி (வேளச்சேரி), வெங்கடேசன் (ஆலந்தூர்), எம்.சி.பிரபாகரன் (பல்லாவரம்), தா.கிருஷ்ணா (தாம்பரம்) உள்ளிட்டோர் தலைமையில் ஆங்காங்கே வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பயணக்குழு காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் சென்றடைந்தது.