விபத்தில் 2 வாலிபர்கள் பலி
மரக்காணம், ஜூலை 14- புதுவை வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (28). அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன் மோகன் (25). இவர்கள் 2 பேரும் ஞாயிறன்று (ஜூலை 14) புதுவையி லிருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு புறப்பட்டனர். மரக்காணம் அருகே ஆலப்பாக்கம் என்ற இடத்தில் வந்த போது அந்த வழியாக வந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த பனைமரத்தில் வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அருண்குமார், ஜெகன் மோகன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மரக்காணம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியான 2 வாலிபர்களின் உடலை கைப்பற்றி புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்றவர் கைது
திண்டுக்கல்,ஜூலை 14- ரயில்வே பாதுகாப்புப்படை மதுரை கோட்ட ஆணையாளர் ஜெக நாதன் உத்தரவின் பேரில் திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் ரஞ்சித் குமார் தலைமை யில் தனிப்படை அமைத்து ரயில்வே டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கடந்த ஒருவாரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமையன்று கொடைரோடு ரயில் நிலையத்தில் சட்டவிரோதமாக ரயில்வே தட்கல் டிக்கெட்டுகளை புக் செய்து விற்பனை செய்து வந்த கொடைரோடு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி( 50) என்பவரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர் படுத்தி, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். கடந்த ஆறு மாதங்களில் மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.