டிஐஜி விஜயகுமார் மரணத்திற்கு சிபிஎம் மாநில செயலாளர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் அவர்கள், இன்று காலை, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது.
கடலூரில் அவர் பணியாற்றிய போது, நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். கடலூர் மாவட்ட மக்களின் சார்பில் பல்வேறு வழக்குகளுக்காக அவரை சந்தித்துள்ளேன். பழக இனியவர், மனித நேய பண்போடு நேர்மையுடன் இயங்கினார், காவல்துறை அதிகாரி என்ற இருமாப்பு எதுவும் இன்றி தான் தலையிட்ட வழக்குகளில் சிறப்பாக பணியாற்றினார்.
சாத்தான் குளம் தந்தை மகன் கொலை, சிவசங்கர் பாபா உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டவர். கடும் உழைப்பால் டிஐஜி அளவிற்கு உயர்ந்த அவருடைய திடீர் இழப்பு காவல்துறைக்கும், மாநிலத்திற்கும் பெரும் இழப்பாகும். அவரது இழப்பால் வாடும் இணையர் கீதாவாணி, மகள் உள்ளிட்ட குடும்பத்தார், சுற்றத்தினர், நண்பர்கள் மற்றும் காவல்துறை நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.