tamilnadu

img

‘இருள் மயமாக்கும்’ மின்வாரிய தனியார்மயம்... ஸ்டாலின் கண்டனம்....

சென்னை:
தமிழகத்தையும் இளைஞர்களின் எதிர்காலத்தையும் இருள் மயமாக்கும் மின்வாரிய தனியார் மயத்தை கைவிட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

மின்மிகை மாநிலம் என்று எந்தச் செயல்முறை அடிப்படையும் இல்லாமல், தனக்குத் தானே வீண் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும், அதன் மின்துறை அமைச்சரும், கோடிக்கணக்கில் ஊழல் செய்வதற்காக,  மின் வாரியத்தின் ஒவ்வொரு பகுதியாகத் திட்டமிட்டுத் தனியாருக்குத் தாரைவார்த்துவரும் நிலையில், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவிலும் மண் அள்ளிப்போடும் மாபாதகச் செயல் அரங்கேறுவது மிகவும் கண்டனத்திற்குரியது.இதனைக் கண்டித்து மின் வாரிய ஊழியர்கள் சங்கத்தினர்  நடத்தும் போராட்டத்திற்கு திமுக முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவினையும் வழங்குகிறது.

ஒப்பந்த பேரம்...
புதிய துணை மின் நிலையங் களைத் தனியாருக்கு 2 ஆண்டுகால ஒப்பந்தத்தில் தாரைவார்த்துள்ள  ஆட்சியாளர்கள், தமிழகம் முழுவதும் உள்ள 650 மின் விநியோக உபகோட்டங்களில் உள்ள பணிகளுக்கு, அவசர அவசரமாக ஒரு கோட்டத்திற்கு ரூபாய் 1,80,88 உள்நோக்கத் துடன் ஒப்பந்தம் போடுவது, மின்சாரத் தாக்குதலுக்கு ஒப்பான அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ‘ஹைவோல்ட்’  அதிர்ச்சியின் பின்னணியில் இருப்பது, தனியார் நிறுவனங்க ளுடன் ஆட்சியாளர்கள் நடத்தியுள்ள பேரமும், அதனால் ஐ.டி.ஐ. படித்த தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு அநியாயமாகப் பறிபோவதும்தான்.மின்வாரியத்தில் ஏற்கனவே பணியில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்க ஒப்புக்கொள்ளப் பட்ட 380 ரூபாய் தினக்கூலியைத் தர மறுக்கும் தமிழக அரசு, தனியாரிடம் தினக் கூலிக்கு அளிக்க வேண்டிய தொகை ரூ.412 என அதிகப்படுத்தி ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் என்ன?

இதயம் இல்லை...
வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மிகக்குறைந்த கூலிக்கு வேலைக்கு வரத் தயாராகியுள்ள நிலையில், ஒப்பந்தத்தைவிடக் குறைவான கூலி தந்து அவர் களைப் பணியில் அமர்த்தி, தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் - ஏற்கனவே ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருப்பவர்களின் வயிற்றிலடிக்கும் செயலை எடப்பாடி பழனிசாமி அரசு இதயம் இல்லாமல் மேற்கொண் டுள்ளது.

விபரீதம்...
தனியார் மூலமாக அனுபவமில்லாத பணியாளர்களைக் குறைவான கூலிக்கு ஒப்பந்தம் செய்யும்போது, பராமரிப்புப் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்படும். பிரேக்டவுன் பணிகளை விரைவாகவும் செம்மையாகவும் செய்திட முடியாது. மிக முக்கியமான பராமரிப்புப் பணிகளில் அனுபவமில்லாதோர் ஈடுபடும்போது அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் பெருந்தீங்கு விளைவிக்கும். மின்தடையை நீக்கி, சீரான மின்சாரம் வழங்குவதிலும் இடர்ப்பாடுகள் அதிகரிக்கும்.

முலாம்பூசல்...
தனியாருடனான ஒப்பந் தங்கள் ஆட்சியில் இருப்பவர்களுக்கு, தனிப்பட்ட முறையில் பெரும் லாபம் தருவதாக இருக்கலாம். அவை தமிழ் நாட்டின் எதிர்காலத்தையே இருட்டாக்கக்கூடியவை. மின் துறை வாயிலாக அதனைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டும் அதிமுக அரசும், மின்துறை அமைச்சரும், இது தற்காலிகமானது எனப் பொய் முலாம் பூசி உண்மையை மறைப்பதைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.நியாயத்தை வலியுறுத்திப் போராடும் மின் தொழிலாளர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, தனியார்மயத்தை முற்றாகக் கைவிடவேண்டும். இல்லையெனில், தமிழக மக்களின் பேராதரவுடன்  திமுக அரசு அமையும்போது, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், ஒப்பந்தங்களில் உள்ள லாபக் கணக்குகளும் ஆராயப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்டரீதியான நடவடிக்கைகள் தவறாது எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;