tamilnadu

img

சிறு குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க டிச.20 தொழில்முனைவோர் கதவடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு

சிறு குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க டிசம்பர் 20ம் தேதி தொழில் முனைவோர்
முன்னெடுக்கும் கதவடைப்பு போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியா முழுவதுமுள்ள சிறு-குறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர் சங்கங்களின்
கூட்டமைப்பு 2021 டிசம்பர் 20 அன்று ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் செய்வது
என்று முடிவு செய்துள்ளன. அகில இந்திய அளவில் இப்படியொரு
கதவடைப்புக்கு இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருப்பது அத்துறை சந்திக்கும்
பிரச்சனைகள் மிக கடுமையானது என்பதை வெளிப்படுத்துகிறது. ஒன்றிய அரசு
தொழில்துறைக்கான மானியம், ஊக்கத்தொகை, சலுகைகள் என்று அறிவிப்பது
அனைத்துமே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானதாகவே இருக்கிறது. கொரோனா
காலத்தில் வங்கிகள் மூலமாக அறிவிக்கப்பட்ட எந்த சலுகைகளும், உதவிகளும்
சிறு-குறு தொழில் முனைவோர்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை.
இதன் காரணமாகவும் இதற்கு முன்பு பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. அமலாக்கம்
ஆகியவற்றின் காரணமாக 5 லட்சத்திற்கும் அதிகமான சிறு-குறு தொழில்
நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.
உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமாகவும், ஏற்றுமதியில்
கணிசமான அளவும், வேலைவாய்ப்பில் மிக அதிகமாகவும் பங்களிப்புச்
செலுத்துகிற துறை என்கிற முறையில் அதற்குரிய முக்கியத்துவத்தோடு அது
ஒன்றிய அரசால் கவனிக்கப்படவில்லை. தாராளமயக் கொள்கையின்
நோக்கமான மையப்படுத்துதலின் காரணமாக சிறு-குறு தொழில்களை ஒன்றிய
அரசு கைவிட்டு விட்டது. மக்களின் வரி பணத்தில் தொழில்களை
காப்பாற்றுவதற்கு என்று அறிவிக்கப்படுகிற மொத்த சலுகைகளையும்
கார்ப்பரேட்டுகளுக்கே மோடி அரசாங்கம் வாரி வழங்குகிறது. கடந்த 7 ஆண்டு
காலத்தில் 10 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகைகளை வாராக் கடன் என்று
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள ஒன்றிய அரசு, சிறு-குறு
உற்பத்தியாளர்களுக்கு வட்டிச் சலுகை உள்ளிட்ட சிறு நிவாரணங்களை கூட
அளிக்க மறுத்து வருகிறது.

எனவே, ஒன்றிய அரசு கீழ்க்கண்ட கோரிக்கைகளை உடனடியாக ஏற்றுக் கொண்டு
சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
1. ஜி.எஸ்.டி.
ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்கு முன்பு இருந்ததைப் போல கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கும், சிறு-குறு தொழில்களுக்கும் இடையே குறைந்தபட்சம் 12.5
சதவிகிதம் அளவிற்காவது ஜி.எஸ்.டி.யில் வேறுபாடு இருக்க வேண்டும். ரூ. 1.5
கோடி வரை விற்று வரவு இருக்கக் கூடிய நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து
விலக்களிக்க வேண்டும்.
2. வங்கி கடன்கள்
கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட வட்டி தள்ளுபடி, வட்டிச் சலுகைகள்,
கடன் தள்ளி வைப்பு ஆகிய எந்த சலுகைகளும் சிறு-குறு நிறுவனங்களுக்கு
சென்று சேரவில்லை. ஒன்றிய அரசு அறிவித்த அவசர கடன் உதவி திட்டத்திலும்
அனுமதிக்கப்பட்ட தொகையை வங்கிகள் ஏற்கனவே கட்ட வேண்டிய கடனுக்காக
சரிசெய்து கொண்டதால் தொழில்முனைவோருக்கு உதவி எதுவும்
கிடைக்கவில்லை. எனவே, வட்டி தள்ளுபடி, கடன் தொகை பிடித்தம் நிறுத்தி
வைப்பு, புதிய மூலதனக் கடன், புதிய கடன்களுக்கு வட்டி குறைப்பு ஆகியவற்றை
ஒன்றிய அரசும், ரிசர்வ் வங்கியும் அறிவிக்க வேண்டும்.
3. மூலப்பொருட்கள் விலை
கடந்த 6 மாத காலத்தில் அலுமினியத்தின் விலை 155 சதவிகிதமும், தாமிரத்தின்
விலை 119 சதவிகிதமும், இரும்பின் விலை 100 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
இதேபோன்று இதர மூலப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே, ஒத்துக்கொண்ட விலையின் அடிப்படையில் சிறு-குறு நிறுவனங்கள்
பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே,
பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் பொருள் உற்பத்தி செய்யப்படும்
போது நிலவும் மூலப்பொருட்களின் விலையின் அடிப்படையில்
உற்பத்தியாளர்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

சிறு-குறு தொழில்களுக்கு தேவைப்படும் மூலப் பொருட்களை அரசே
கொள்முதல் செய்து உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையில் வழங்க
வேண்டும்.
மேலும், சந்தைப்படுத்துதல், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உரிய
காலத்தில் சிறு-குறு நிறுவனங்களுக்கு பொருட்கள் வாங்கியதில் கொடுக்க
வேண்டிய தொகையை கொடுத்தல் உள்ளிட்டு இத்தொழிலை காப்பாற்ற உரிய
நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு அரசு சிறு-குறு தொழில்களை மீட்டெடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழு
மூன்று மாதத்திற்குள் தனது அறிக்கையை வழங்கும் என்று அறிவித்திருந்தது.
ஐந்து மாதங்கள் ஆன நிலையிலும் இந்த அறிக்கை வந்ததாக தெரியவில்லை.
எனவே இந்த அறிக்கையை விரைவில் பெற்று உரிய நிவாரணங்கள் அளிப்பதற்கு
முன்வர வேண்டும். மேலும், ஜி.எஸ்.டி., வங்கிக் கடன், மூலப்பொருட்கள்
ஆகியவை குறித்த கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றுவதற்கு
தமிழ்நாடு அரசு உரிய அழுத்தத்தை அளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
தொழில் முனைவோர் நடத்தவுள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு சிபிஐ(எம்)
ஆதரவு

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் கதவடைப்பு
போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில
செயற்குழு தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், டிசம்பர் 20
அன்று சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் மாவட்ட
தலைநகரங்களில் நடத்தும் இயக்கத்திற்கு கட்சியின் மாவட்டக்குழுக்கள் உரிய
முறையில் ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

;