tamilnadu

img

சிபிஎஸ்இ வினாத்தாளில் குடும்ப ஒழுக்கம் குறித்த சர்ச்சை கேள்வி: ஆர்எஸ்எஸ்-பாஜக சூழ்ச்சி செய்கிறது - ராகுல் காந்தி

சிபிஎஸ்இ வினாத்தாளில் பாலின பாகுபாட்டுடன் குடும்ப ஒழுக்கம் என்ற பெயரில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பாஜக சூழ்ச்சி செய்கிறது என்று ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வின் ஆங்கில வினாத் தாளில் பெண்களுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளது. இதில் குடும்ப ஒழுக்கம் தொடர்பாக வாக்கியம் கொடுத்து விடையளிக்கும் பகுதி இடம் பெற்றிருந்தது. இதில், மனைவிமார்கள் வலுப்பெறுவது பெற்றோர் என்ற கட்டமைப்பை வலுவிழக்க செய்கிறது. இளம் தலைமுறையினர் தந்தையின் பேச்சை வேதவாக்காக மதிப்பதில்லை. முன்பு கணவர்களுக்கு மனைவிமார்கள் கீழ்ப்படிந்த நிலையில் தற்போது அப்படியான சூழல் இல்லை. குழந்தைகளையும், வேலையாட்களையும் அவர்களுக்கான இடத்தில் வைக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.  பெண்களுக்கு எதிராக இடம்பெற்றிருந்த இந்த வாக்கியத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இதுவரை  நடைபெற்ற பெரும்பாலான சிபிஎஸ்இ தாள்கள் மிகவும் கடினமாக இருந்தன மற்றும் ஆங்கில தாளில் உள்ள படித்து விடையளிக்கும் பகுதி முற்றிலும் அருவருப்பானது.
இளைஞர்களின் மன உறுதியையும் எதிர்காலத்தையும் நசுக்க  ஆர்எஸ்எஸ்-பாஜக சூழ்ச்சி செய்கிறது. குழந்தைகளே, உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். கடின உழைப்பு பலன் தரும். மதவெறி இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.


 

;