பழனி, டிச. 10 - தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதுடன், கூட்டுறவு சங்கத் தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் மூன்று நாள் கூட்டம் டிசம்பர் 9 அன்று பழனியில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமையில் துவங்கியது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ள இக்கூட்டத்தில் செவ்வாயன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜனவரி 5-இல் முடிவடையும் 27 மாவட்ட உள்ளாட்சி பதவிகள்
2019ம் ஆண்டு டிசம்பரில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 5.01.2025 அன்று முடிவடைகிறது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி அந்தந்த மாவட்ட அரசிதழில் தேர்தல் தொடர்பான பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 27 மாவட்டங்களில் நடத்த வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்திய அரசியலைப்பு சட்டப்பிரிவு 243E(3) (a) ஊரக உள்ளாட்சிகளின் பதவி காலமான 5 ஆண்டுகள் முடியும் முன்பு அவற்றுக்கான தேர்தல் நடத்தி முடிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் அதிமுக உரிய காலத்தில் தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளின் வேட்டைக்காடாக உள்ளாட்சி அமைப்புகள் மாற்றப்பட்டதை சுட்டிக்காட்டுகிறோம். அத்தகைய நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதையும், ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கேற்ப தேர்தலை தள்ளி வைப்பது ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது என்பதையும் அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.
எனவே, 2025 ஜனவரி 5-ஆம் தேதிக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதற்குரிய முறையில் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
கடந்த ஆண்டே முடிவடைந்த கூட்டுறவு பதவிக்காலம்
கூட்டுறவு சங்கங்களுக்கான நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில் தற்போது கூட்டுறவு நிறுவனங்கள் அனைத்தும் செயலாட்சியர்கள் கட்டுப்பாட்டில் நடைபெற்று வருகிறது. கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டும், திருத்திய வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடுத்தனர். அதில் அடுத்த ஆறு மாதத்திற்குள் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் வாக்காளர் பட்டியலைத் திருத்தி அமைக்க வேண்டும், வாக்களிக்க தற்போது உள்ள உறுப்பினர்கள் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளுடன் இணைத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. புதிய உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமை உள்ள ‘அ’ வகுப்பு உறுப்பினராக மாற்றி அமைத்திட தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு பொதுப் பேரவை கூட்டங்கள் அறிவிக்கப்பட்டு ஏற்கெனவே சேர்க்கப்பட்ட ‘ஆ’ வகுப்பு உறுப்பினர்களை ‘அ’ வகுப்பு உறுப்பினராக மாற்றுவதற்கான தீர்மானம் மற்றும் இறந்த உறுப்பினர்களை நீக்குதல், புதிய உறுப்பினர் சேர்த்தல் உள்ளிட்டவைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஏற்கெனவே அறிவித்தபடி தேர்தல்களை நடத்துக!
தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் சுமார் 2 கோடியே 23 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் தற்போது 44 லட்சம் பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 1 கோடியே 79 லட்சம் உறுப்பினர்களில் 1 கோடியே 46 லட்சம் உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகுதியாக உள்ள 33 லட்சம் உறுப்பினர்கள் தங்களது ஆதார் அட்டையை வழங்கினால் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் 22 ஆயிரத்து 250 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்!
இந்நிலையில், 2013 மற்றும் 2018-இல் நடைபெற்ற தேர்தல் அராஜகங்களை அளவிட முடியாது. எனவே, எதிர்வரும் கூட்டுறவு தேர்தல் ஜனநாயகப்பூர்வமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் சேர்ப்பதற்கு உரிய கால அவகாசம் அளிப்பது, வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் என்பதற்கான கால அவகாசம் அளிப்பது, வாக்காளர் தகுதிகள் / வேட்பாளர் தகுதிகள் அனைவரும் அறியும் வகையில் அறிவிப்பு செய்வது, வாக்களிக்க போதுமான பாதுகாப்பு அளிப்பது, கூட்டுறவு தேர்தல் ஆணையம் சுயேட்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதை உறுதி செய்வது உள்ளிட்டவைகளை அரசு உறுதி செய்திட வேண்டும். வேட்பு மனு தாக்கல், வேட்பு மனு பரிசீலனை, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் அறிவிப்பு என அனைத்திலும் விதிமுறைகளை முறையாக பின்பற்றி கூட்டுறவு தேர்தலை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.