சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம்
சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல், டீசல் மீது சிறப்பு கலால் வரி விதித்து மக்கள் மீது பொருளாதார யுத்தம் தொடுக்கும் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து சிபிஎம் கலவை தாலுகா குழு சார்பில் புதனன்று (ஏப். 9) தாலுகா குழு செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
சொந்தமாக YOUTUBE சேனல் உருவாக்க சென்னையில் பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில் “சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ தொடர்பான பயிற்சி அளிக்க உள்ளது. வரும் 22 ஆம்தேதி முதல் 24 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்நிறுவன வளாகத்தில் இந்த பயிற்சி நடை பெறும். “சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல் சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது. பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்கு விப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் – டொமைன் பெயர் & ஹோஸ்டிங் இணைய தள வடிவமைப்பு நுட்பங்கள் ஆகியவை தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண், பெண், திரு நங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்கு பெறும் ஆண், பெண், திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இப்பயிற்சி பற்றிய விவ ரங்களை அறிய விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள லாம். முகவரி தொலைபேசி, கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600 032. 9543773337, 9360221280 முன்பதிவு அவ சியம் பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
குடிமனைப்பட்டா வழங்கக்கோரி மனு
தாம்பரம் மாநகராட்சி, ராஜீவ்காந்தி நகரில் (புலிகொரடு கிராமம்) 80 ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 102 குடும்பங்களுக்கு பட்டா வழங்க ஏதுவாக வருவாய்த்துறை, வனத்துறைக்கு இருமடங்கு நிலம் கொடுத்து பல ஆண்டுகளாகிறது. இருப்பினும் குடிமனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளது. எனவே, குடிமனைப்பட்டா வழங்க கோரி திங்களன்று (ஏப்.7) செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி மனு அளித்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.