tamilnadu

img

நகைச்சுவை அரசியல்: அமைச்சருக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்....

சென்னை:
நகைச்சுவை அரசியல் நடத்துவதை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட் டணி மக்கள் நலன் சார்ந்து நீண்டகாலமாக ஒற்றுமையுடன் கட்டுக்கோப்பாகச் செயல்பட்டு வருகிறது.தமிழக மக்களைப் பாதிக்கிற எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளை அழைத்துப் பேசி கருத்துகளைப் பகிர்ந்து, விவாதித்து, தீர்மானமாக வடித்து, கொள்கை திட்டங்கள் வெளியிடப்படுகின்றன.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவது, போராட்டங்கள் நடத்துவது என ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட அணுகுமுறைகளின் அடிப்படையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பது ஒரு கொள்கைக் கூட்டணி.அதிமுக கூட்டணிக் கட்சிகள் என்றைக்காவது மக்கள் பிரச்சனைகள் குறித்துக் கூடிப் பேசியிருக்கிறதா? விவாதித்திருக்கிறதா? முடிவெடுத்திருக்கிறதா?கூட்டணிக் கட்சி என்ற அடிப்படை இலக்கணத்தைக் கூட நடைமுறையில் கடுகளவும் கடைப்பிடிக்காத அதிமுக கூட்டணியை என்னவென்று அழைப்பது? அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா? இல்லையா? என்பதே ஒரு கேள்விக்குறியாகும்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால்‌ பழனிசாமிதான் முதல்வர் என்று  அறிவிக்கப்படுகிறது. இந்த முடிவு எடுப்பதற்கு முன்பாக பாஜக தலைமையோடு அதிமுக தலைமை கலந்து பேசியிருக்கிறதா?அதிமுக கூட்டணியில் பாஜகவைச் சேர்த்தால்  மக்களவைத் தேர்தலைப் போல படுதோல்வி அடைய நேரிடும் என்ற அச்சம் அதிமுக தலைமைக்கு இருக்கிறது. இந்த அச்சம் அதிமுக தலைமைக்கு மட்டுமல்ல, அந்த கட்சியின் தொண்டர்களிடமும் இருக்கிறது.தமிழக மக்களால் அதிகம் வெறுக்கப்படுகிற கட்சியாக பாஜக இருப்பதற்குக் காரணம் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள்தான்.எஃகு கோட்டை போல உறுதியாகச் செயல்பட்டு வருகிற திமுக தலைமையிலான கூட்டணியைப் பற்றிப் பேச டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் எவருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது.இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.