ரஷ்ய கல்விக் கண்காட்சி சென்னையில் நாளை தொடங்குகிறது
சென்னை, ஜூன் 6-ஆழ்வார்பேட்டை பழைய சோழா ஹோட்டல் பின்புறம் உள்ள கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷ்யகலாச்சார மையத்தில் ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது.இதில் மருத்துவம், பொறியியல் கல்வியைக் கற்பிக்கும்பத்துக்கும் மேற்பட்ட முன்னணி ரஷ்ய அரசு கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இளநிலை, நிறைநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்புவோர் அதற்கு தகுதியான சான்றுகளுடன் வருகை தந்தால் அம்மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை வழங்கப்படும். இந்தக் கண்காட்சியை, ரஷ்ய அறிவியல் கலாச்சார மையம் மற்றும் ரஷ்ய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான - இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ஸ்டடி அப்ராட் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இதுவரை ஆங்கில வழிக் கல்வியில் மருத்துவம் பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் 3000 சீட்கள் வரை ஒதுக்கி வந்த ரஷ்ய கல்வி நிறுவனங்கள், வரும் கல்வியாண்டில் (2019-2020) அதனை 5000 ஆக உயர்த்தியுள்ளதாக தென்னிந்தியாவுக்கான ரஷ்ய தூதரகத்தின் கலாச்சார துணைத் தூதர் ஜெனடி ரோகலேவ் கூறினார்.விண்வெளி ஆய்வு, பொறியியல், தொழில்நுட்பம், உயிர்வேதியியல், மருத்துவம் போன்ற துறைகளில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த படிப்புகள் மற்றும் கண்காட்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 92822 21221 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
4 ஆம் வகுப்பு மாணவன் மரணம்
பொன்னேரி, ஜூன் 8-பொன்னேரியை அடுத்த கூடுவாஞ்சேரி ஏழுமலையான் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி. ஆட்டோ ஒட்டுநர். இவருடை மகன் கவுசிகன் (8). பொன்னேரி அருகே உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தான்.புதனன்று இரவு கவுசிகன், சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினான். இரவு திடீரென சிறுவனுக்கு வாந்தி வந்துள்ளது. பிறகு கவுசிகன் மயங்கி விழுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கவுசிகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.