தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத் தீவிர புயலான ”பிபர்ஜாய்” வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து, மேற்கு-தென்மேற்கே சுமார் 280 கி.மீ தொலைவில் தேவ்பூமி துவாரகா(குஜராத்) இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 290 கி.மீ தொலைவில் போர்பந்தரில் இருந்து மேற்கு-வடமேற்கே சுமார் 340 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வடக்கு திசையிலும் நகர்ந்து செளராஷ்டிரா-கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் ஜூன்15 அன்று மாலை மிகத் தீவிர புயலாக மாண்டிவி(குஜராத்) மற்றும் கராச்சி(பாகிஸ்தான்) இடையே ஜக்காவு துறைமுகம் அருகே கரையை கடக்கக்கூடும்.அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கி.மீ வேகத்திலும் இடையிடையே 150 கி.மீ வேகத்திலும் இருக்கக்கூடும்.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஜுன் 14 முதல் 18 வரை தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
ஜூன்14 முதல் 16 வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையை பொருத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கான அறிவிப்பு
ஜூன் 14 முதல் 18 வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.இந்த நாளில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.