கிரிண்டர் செயலியை தடை செய்க”
தமிழ்நாடு அரசுக்கு காவல் ஆணையர் அருண் கடிதம்!'
கிரிண்டர் செயலியை பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனை நடைபெறு வதாகவும், அதனால் அந்த செயலியை உடனடியாக தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் எனவும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சென்னை மாநகரில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த மாநகர காவல் ஆணையர் அருண் பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதாவது, மாநகர காவல் துறையினரின் இத்தகைய நடவடிக்கையால் கஞ்சா, மெத்தபெட்டமைன் ஹெராயின், ஆம்பெட்டமைன் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து, அவர்களை சிறையில் அடைத்து வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படும் நபர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பெரும்பாலான நபர்கள் கிரிண்டர் ஆப் (Grindr app) என்ற செயலி மூலமாக பல்வேறு குழுக்களை உருவாக்கி, அதன் மூலம் சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.