tamilnadu

img

தமிழகத்தில் நாளை 60% பேருந்துகள் இயங்கும் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு

தமிழகத்தில் நாளை 60 சதவிகிதம் வரை பேருந்துகள் இயக்க, அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக தொ.மு.ச. பொருளாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசை கண்டித்து அகில இந்திய தொழிற்சங்கம் சார்பாக, இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் அடுத்தகட்டம் குறித்து, அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பாக, சென்னை திருவல்லிக்கேனியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “தமிழகத்தில் ஒன்றிய அரசை கண்டித்து வெற்றிகரமாக முதல் நாள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் தற்போது மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, போராட்டத்தின் வடிவை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், நாளை 60 சதவிகிதம் வரை பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாகவும், நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்ளவும், மற்ற தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தனர். மேலும், அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்படாத வகையில், தமிழகத்தில் பிற பணிகளை தொடரும் வகையில் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூடி முடிவெடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.