tamilnadu

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,475 வழக்குகளுக்கு தீர்வு

கடலூர், ஜூலை 14- கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,475 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.24.88 கோடி நிவாரணமாக வழங்கிட உத்தரவிடப்பட்டது. நீதிமன்றங்களில் தேங்கும் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் சமரசம் செய்யக்கூடிய வழக்கு களை மாற்றுமுறை தீர்வு மையம் மூலமாக தீர்த்திட உச்சநீதிமன்றம் தேசிய மக்கள் நீதிமன்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் கடலூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் மற்றும் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, பரங்கிப்பேட்டை, திட்டக்குடி, காட்டுமன்னார்கோயில் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமையன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.  கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி தலைமையில் 34 பென்ஞ் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கான துவக்க நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி செந்தில்குமார், மாவட்ட நீதிபதி (மக்கள் நீதிமன்றம்) கே.அய்யப்பன் பிள்ளை, தலைமை குற்றவியல் நீதிபதி எஸ்.திருவேங்கட சீனுவாசன், முதன்மை மற்றும் முதலாவது சார்பு நீதிபதி எம்.மூர்த்தி, இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி பிரபாவதி, கூடுதல் மாவட்ட நீதிபதி (நில எடுப்பு) கோபிநாத், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி கே.ஜோதி மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் விசாரணையில் பங்கேற்றனர். வழக்கறிஞர்கள், வழக்காடிகள் ஆஜராகி வாதாடினர். 4  மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி, குடும்ப விவகாரம், சிறுவழக்கு, சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள் 6,800 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், ஒரே நாளில் 4,475 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.24.88 லட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்கிட உத்தரவு வழங்கப்பட்டது. கடந்த முறை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,400 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.19 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய முடியாது என்பதால் இந்த வழக்குகள் இத்தோடு முடிவுக்கு வருவதாகவும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.