சகோதரிகளின் கணவர்கள் அரசு வேலையில் இருப்பதை காரணம் காட்டி, பெண்ணுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம், கருங்குழி பஞ்சாயத்து தொடக்க பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தவர் தண்டபாணி. இவர் 2000ம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகள் சுந்தரி, தனது சகோதரிகளின் அனுமதியைப் பெற்று, கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி 2001ம் ஆண்டு விண்ணப்பித்தார்.
அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், 2015ம் ஆண்டு அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுந்தரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரரின் 4 சகோதரிகளின் கணவர்களும் அரசு வேலையில் உள்ளனர். மனுதாரரின் கணவரும் அரசு பணியில் உள்ளார். எனவே, கருணை அடிப்படையில் வேலை வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, கருணை அடிப்படையில் வேலை கோரி மனு அளித்த போது மனுதாரருக்கு திருமணமாகவில்லை. திருமணம் நடந்த பின்னர் அதை காரணம் காட்டி மனுவை நிராகரித்தது ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
மனுதாரரின் சகோதரிகளின் கணவர்கள் அரசு வேலையில் இருப்பதால் அவர்கள் மனுதாரரை கவனித்து கொள்வார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. மனுதாரரின் கணவர் தற்காலிக ஊழியராக கடைநிலை பணியாளராக வருகிறார். ஆகவே, கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது. ஆகவே, அவரது தகுதிக்கு ஏற்ற வகையிலான பணியை நான்கு வாரங்களுக்குள் வழங்க உத்தரவிட்டார்.