tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் 21 பேர் கைது

அறந்தாங்கி, அக்.9 - தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற நான்கு விசைப்படகுகளையும், அதிலிருந்த 21 மீனவர்களையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.  இவர்களை காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். மீனவர்களிடம் முதல்கட்ட விசாரணையை நடத்தி, அவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குரூப் - 4 இல் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு 

சென்னை,அக்.9- குரூப்-4 பணியில் மொத்த காலிப் பணி யிடங்களின் எண்ணிக்கை  8,932ஆக அதிகரிக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் அறிவித்துள்ளது.  கடந்த செப்டம்பர் 11 அன்று 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில் மேலும் 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கிராம நிர்வாக அலு வலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், இள நிலை நிர்வாகி, வனக் காவ லர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவி களுக்கு குரூப் 4 தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஜுன் 9 ஆம் தேதி நடத்தியது. 

சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாடு முழு வதும் 7,247 மையங்களில் 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர்.

அதன்பின்னர் குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480  பணியிடங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலி யிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்தது.

மடத்துக்குளம் அருகே சாலை விபத்தில் பழனியைச் சேர்ந்த  4 பேர் பலி

உடுமலை, அக்.9- மடத்துக்குளம் அருகே நிகழ்ந்த  சாலை விபத்தில் பழனியைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.   திண்டுக்கல் மாவட்டம், பழனி, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (45). இவரது மனைவி ப்ரீத்தி (40),  மகன்கள் ஜீவப்பிரியன் (13), ஜெய பிரியன் (11), தியாக ராஜனின் பெற்றோர் நடராஜன் (75) – மனோன்மணி (65) ஆகிய 6 பேரும் கோவை மாவட்டத்திலுள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் செவ்வாயன்று பங்கேற்றனர். 

இதன்பின் நள்ளிரவில் பொலிரோ ஜீப் ஒன்றில் மீண்டும் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா கருப்பசாமி புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலையில்,  மதுரையிலிருந்து பாலக்காடு நோக்கி 22 பேருடன் வந்த டெம்போ டிராவலர் வாகனம், தியாகராஜனின் ஜீப் மீது மோதியது. இந்த விபத்தில் தியாகராஜன், அவரது மனைவி ப்ரீத்தி, மகன் ஜெய பிரியன், தியாகராஜனின் தாய் மனோன்மணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். நடராஜன், ஜீவப்பிரியன் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபோல டிராவலர் வேனில் வந்த பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சிவன் (38) என்பவர் காயமடைந்தார். டிராவலர் வேனில் வந்த 22 பயணிகளில் 12 பேர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இவ்விபத்து குறித்து மடத்துக்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.