tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

சென்னை விமான நிலையத்தில்  10 ட்ரோன்கள் பறிமுதல்

சென்னை, மே 7- ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருந்து பயணிகள் விமானம் சென்னைக்கு கடந்த 30-ம் தேதி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகள் விமான நிலைய வருகைப் பகுதியில் உள்ள கன்வேயர் பெல்டுக்கு வந்தது. உடைமைகளை எடுத்துக் கொண்டு, சுங்க சோதனையை முடித்துவிட்டு பயணிகள் வெளியில் சென்றனர். ஆனால், கன்வேயர் பெல்ட்டில் ஒரு பெரிய பை மட்டும் யாரும் எடுக்காமல் சுற்றிக்கொண்டு இருந்தது. இதையடுத்து, அந்த பை ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. 2 நாட்கள் ஆகியும் அந்த பைக்கு உரிமை கோரி யாரும் வராததால், அந்த பை சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.  சுங்க அதிகாரிகள் பையை திறந்து சோதனை செய்தபோது, அதில் சாக்லேட், பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் இருந்தன. அதற்கு இடையே தலா 1.7 கிலோ எடை கொண்ட 10 ட்ரோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 15 கிமீ முதல் 20 கிமீ வரை துல்லியமாக படம் பிடிக்கக்கூடிய சக்தி வாய்ந்த இந்த ட்ரோன்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளதால், அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சட்ட விரோதமாக கடத்தி வந்த நபர் யார் என்று சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்  போர்க்கால ஒத்திகை

 செங்கல்பட்டு, மே7- பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களின் மீது இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்கி அழித்தது. மேலும், நமது நாட்டில் பல்வேறு முக்கிய இடங்களில் போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருந்தது. இதன்பேரில், தமிழகத்தில், மிக முக்கிய இடமாக கருதப்படும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ் முன்னிலையில் நடைபெற்றது.  இதில், அணுமின் நிலையங்களை ஏதேனும் தாக்குதல்கள் மூலம் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அப்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து ஒத்திகை நடைபெற்றது. இதில், அணுமின் நிலைய வளாகத்தில் அணுக்கசிவு ஏற்பட்டு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை எவ்வாறு மீட்பது, அவர்களுக்கு தேவையான முதலு தவிகள் அளித்து பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் செயல் விளக்கம் செய்து காட்டினர்.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு  சிறப்பு பேருந்துகள்

திருவண்ணாமலை,மே.7- திருவண்ணாமலையில் சித்திரை பவுர்ணமி அன்று 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால், அடிப்படை வசதிகள் முன்னேற்பாடு பணி கள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் சி. என். அண்ணா துரை, சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆகியோர் முன்  னிலை வகித்தனர். பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.  இதைத் தொடர்ந்து, திரு வண்ணாமலைக்கு மே 9 ஆம் தேதி முதல் 13 வரை கூடுதலாக 9 சிறப்பு ரயில்கள், கூடுதல் பெட்டிகளுடன் இயக்குவது என்றும் திருவண்ணாமலை நகரில் 20 தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைப்பது என்றும் 4533 சிறப்பு பேருந்துகள் இயக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், 56 மருத்துவ குழுவினருடன் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகிறது. 5,197 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 15 தீயணைப்பு வாகனங்கள் 200 தீயணைப்பு வீரர்களுடன் தயார் நிலையில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.