நாமக்கல், ஜூன் 17- தொட்டிபட்டி ஊராட்சி கோனாம்பரப்பு பகுதி மக்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், தொட்டியபட்டி ஊராட்சி கோணம்பரப்பு பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 18 ஆண்டு காலமாக குடியிருக்கும் தங்கள் வீட்டிற்கு பட்டா கேட்டு 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மனு அளித்து வருகின்றனர். மேலும், இவர்கள் வசிக்கும் பகுதியில் சாலை, மின்சாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. இதுகுறித்து தொடர்ந்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், திங்களன்று அப்பகுதி பொதுமக்கள் அரசு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர்.