tamilnadu

img

அந்த பணம் இனி எங்களுக்கு சேமிப்பாக இருக்கும்..! அரசு பேருந்தில் இலவச பயணம் குறித்து பெண்கள் உருக்கம்

கோவை, மே. 9 - அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தின் 23ஆவது முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்த ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு,அரசு காப்பீட்டு திட்டத்தில் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை, நகர பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமின்றி பயணம் உள்ளிட்ட 5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இதில் முத்தாய்ப்பாக தமிழகம் முழுதும் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் அனைத்து பெண்கள் சனிக்கிழமை முதல் இலவச பயணம் செய்யலாம் என உத்தரவிட்டது பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணித்து வருகின்றனர். கோவையில் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலிருந்து மாவட்டம் முழுவதும் 115 வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் 627 இயக்கப்படுகின்றன. இதில் 369 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கான இலவச பயண அறிவிப்பைத் தொடர்ந்து கூடுதலாக 78 பேருந்துகள் என மொத்தம் 447 நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கோவை தொழில் நகரம், கல்வி மாவட்டம் என்பதால் இதனைச்சார்ந்த பெண்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இதுகுறித்து கோவை இராமநாதபுரம் பகுதியில் இருந்து கட்டிட பணிக்கு செல்லும் பெண்கள் கூறுகையில், நாங்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 20 ரூபாயிலிருந்து 30 வரை பேருந்து கட்டணம் செலுத்துவோம். இன்று நாங்கள் பேருந்தில் ஏறியபோது நடத்துனர் கட்டணம் வாங்கவில்லை. இலவசமாக பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என தெரிவித்தார். முதலமைச்சர் உத்தரவால் எங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் மேஸ்திரியிடம் அட்வான்ஸ் வாங்கியே பயணம் செய்கிறோம். அந்த பணம் இனி எங்களுக்கு சேமிப்பாக இருக்கும் என உருக்கமாக தெரிவித்தனர். இதேபோன்று தொண்டாமுத்தூர் உள்ளிட்ட கிரமங்களில் இருந்து அதிகாலை காய்கறிகளை கொண்டு வந்து நகரத்தில் விற்பனை செய்து திரும்பும் பெண்கள் கூறுகையில், அழுகிப்போகும் முன்பு காய்கறிகளை விற்றத்தால் எங்கள் வயிற்றுப்பாடு. விற்கவில்லை என்றால் பேருந்து கட்டணமும் எங்களுக்கு நஷ்டம்தான். இப்போது இலவசமாக போகலாம் என்பதால் எங்களுக்கு எவ்வளவு தூரம் போயும் விற்பனை செய்யமுடியும் என்றனர். கோவை நேரு மைதானத்தில் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளும் மாணவிகள் கூறுகையில், அன்னூரில் கிராமத்தில் இருந்து வருகிறோம். காந்திபுரம் வந்து அங்கிருந்து நேரு ஸ்டேடியம் வருவோம். ஒரு நாளைக்கு போக வர ஐம்பது ரூபாய் எப்படியும் பேருந்துக்கு செலவாகும். இதன்காரணமாகவே எங்களோடு விளையாட்டு பயிற்சிக்கு வருபவர்கள் சில நாட்கள் பேருந்துக்கு காசில்லை நான் வரவில்லை என்பார்கள். முதலமைச்சரின் அறிவிப்பால் நாங்கள் எல்லோரும் இப்போது ஒன்றாக விளையாட்டு பயிற்சிக்கு செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.