கோவை மாநகராட்சி மாடு அறுவை மனைகளில் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, ஆட்சியர் அலுவலகத்திற்கு கன்றுகளுடன் வந்து இறைச்சி விற்பனையாளர்கள் மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கோவை சத்தி சாலை மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில் மாடு அறுவை மனைகள் செயல்பட்டு வருகிறது. இதில் காளை மாடு மற்றும் கன்றுகளை வெட்டுவதற்கு இறைச்சி விற்பனையாளர்கள் 10 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அறுவை மனைகளை ஏலம் எடுத்துள்ள அஸ்லம் அலி மற்றும் இப்ரஹீம் பாதுஷா ஆகிய இருவரும், விதிகளுக்கு முரணாக கட்டணம் வசூலிக்கின்றனர். மாட்டுக்கு 300 முதல் 500 ரூபாய் வரையிலும், கன்றுகளுக்கு 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் வசூலிக்கும் தொகைக்கு உரிய ரசீதுகள் வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டி கன்றுகளுடன் இன்று விற்பனையாளர்கள் மனு அளிக்க வந்தனர். கன்றுகளின் கழுத்துகளில் கட்டணக்கொள்ளை என எழுதிய பதாகைகளையும் தொங்க விட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாடுகளை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இறைச்சி விற்பனையாளர்கள் மட்டும் புகார் மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.