மேட்டுப்பாளையம், ஆக.5- மழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள குளம் மற்றும் குட்டைகளில் நீர் நிரம்ப துவங்கியுள்ளதால் இதில் மீன் பிடித்து விற்பனை செய்யும் பணிகள் துவங்கி யுள்ளன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கமாக பெய்ய வேண்டிய பருவ மழையின் அளவு இவ்வாண்டு குறைந்து காணப்பட் டாலும், மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானியாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, மேற்குத்தொடர்ச்சி மலைக்காடு களில் பெய்யும் மழை காரணமாக ஆற்றின் வேகம் அதி கரித்துள்ளது. பவானியாற்றின் நீர்வரத்து காரணமாக இதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதோடு இங்குள்ள குளம் குட்டைகளும் நிரம்ப துவங்கியுள்ளன. காரமடை கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட பெள்ளாதி மற்றும் அன்சூர் குளங்களில் நீர் நிரம்பி காணப்படுவதால் இங்குள்ள குளத்து மீன்களை பிடிக்க மீனவர்களுக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கத் தில் உறுப்பினர்களாக உள்ள மீனவர்கள் முறைப்படி விண் ணப்பித்து அனுமதி பெற்று பரிசல்களில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இங்குள்ள குளங்களில் ஜிலேப்பி, மிர்கால், ரோகு, அவுரி வகை மீன்கள் கிடைக்கின்றன. மாலை நேரத்தில் குளத்து நீருக்குள் வலைகளை கட்டும் மீனவர்கள் அடுத்த நாள் அதிகாலை முதல் பரிசல்களில் சென்று வலையில் சிக்கியுள்ள மீன்களை சேகரித்து கரைக்கு கொண்டு வருகின்றனர். பின்னர் மீனின் வகைகளை பிரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதேபோல் பவானி ஆற்றின் நீர்த்தேக்க பகுதிகளிலும் மீன் பிடி பணிகள் துவங்கியுள்ளன. கடந்த பல மாதங்களாக போதிய மழையின்மை மற்றும் கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு கிடந்தன. இதனால், இப்பகுதியில் மீன்பிடி தொழிலே முடங்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் நீர் வரத்தும் மீன்பிடி பணிகளும் துவங்கியுள்ளது மீனவர்களி டையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.