tamilnadu

வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மரணம்

ஈரோடு, மே 13-ஈரோடு அடுத்த சித்தோட்டில் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு பணியில் இருந்த துணை ஆய்வாளர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோட்டை அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ வீரர்களும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மூர்த்தியும்(52) வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி ஓட்டுப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், ஞாயிறன்று 12.30 மணி அளவில் மூர்த்திக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் நெஞ்சை பிடித்தப்படி சரிந்து விழுந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற காவலர்கள் அவரை காவல்துறை வாகனத்தில் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மூர்த்திக்கு பாவாத்தாள் என்ற மனைவியும், கவுதம் என்ற மகனும், காவியா என்ற ஒரு மகளும் உள்ளனர்.