tamilnadu

img

நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதியம் வழங்க மறுப்பு

அவிநாசி, மே 14-அவிநாசியில், நூறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளிகளுக்கு ஒரு வருடமாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியத்தை வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் மனு அளித்தவர்களிடம் அவர் இழிவான வார்த்தைகளில் பேசியதால் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவிநாசி ஒன்றியம் வடுகபாளையம் கானூர்கிராம பகுதிகளில் மாதம்மாள், பழனியம்மாள் ஆகியஇருவரும் 2005ஆம் ஆண்டு முதல் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2017ஆம் ஆண்டியிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை ஊதியம் வழங்கவில்லை என தெரிகிறது. இதில் பழனியம்மாளுக்கு 2018 இல் இருந்து 2019 வரை 60 நாட்கள் பாக்கியும், 2019 ஆண்டு 6 நாட்கள் ஊதியம் பாக்கி என மொத்தம் 144 நாட்கள் பாக்கி உள்ளது. இதேபோல் மாதம்மாள் 2017 யிருந்து 2018ஆம் ஆண்டு முதல் 73 நாட்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. இவர்களின் கோரிக்கை மனுவை விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சண்முகம், ஒன்றிய நிர்வாகிகள் பழனிசாமி, ராஜன் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹரிஹரனிடம் அளித்தனர். மனு அளித்த பின் விவசாய தொழிலாளர் சங்கத்தினர், ஹரிஹரனிடம் கோரிக்கை விரைந்து நிறைவேற்றுமாறு கூறி உள்ளனர். அப்போது ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மிக இழிவாக, தரக்குறைவாக பதில் அளித்துள்ளார்.  இதில் அதிர்ச்சியடைந்த விவசாய தொழிலாளர் சங்கத்தினர், பொறுப்புள்ள அதிகாரியான நீங்கள் இப்படி தரம் தாழ்ந்து பேசுவது சரியில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் நூறு நாள் வேலை சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்திக்குமாறு கூறினார். இதன்பின் நூறு நாள் வேலை சம்பந்தப்பட்ட அதிகாரி கூறுகையில், 4 மாதத்திற்கு ஒரு முறை தான் சம்பளம் வழங்கப்படும். இவர்கள் வங்கி கணக்கு முறையாக இல்லை என்று கூறியுள்ளார். வருகின்ற மாதங்களில் வங்கி கணக்கு சரியாக இருந்தால் பணம் அனுப்பப்படும் என அலட்சியமாக பதிலளித்தார். இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சண்முகம் கூறுகையில், நூறு நாட்கள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகத்தில் பலமுறை மனு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டபோது தான் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஒரு முறையான பதில் அளிக்காமல் மிக தரக்குறைவாக பேசி மேலதிகாரிக்கு மாற்றி விட்டார். அந்த அதிகாரி, இவர்களுடைய வங்கி கணக்கு சரியில்லை. இதுகுறித்து வங்கியில் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார். இதே நிலை நீடித்தால் விவசாயத் தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.