tamilnadu

img

குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் ஒரு செவிலியர் கைது

சேலம், மே 10-ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு பெண் உதவி செவிலியரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடுதனியார் மருத்துவமனை செவிலியர்பர்வீன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி, செல்வி என மொத்தம் 8 பேர் கைதுசெய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையில், இவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குழந்தை விற்பனை புரோக்கர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.இதையடுத்து சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணன் மற்றும் ராஜா சீனிவாசன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமுதவள்ளி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் இடைத்தரகர் அருள்சாமி ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்ததில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தது. குறிப்பாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இக்கும்பல் குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து வெள்ளியன்று சேலம் சர்கார்கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் உதவி செவிலியர் சாந்தி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதன்பின் அவரை நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி முன்னிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்துஅவரை சிபிசிஐடி காவல்துறையினர் தங்களது விசாரணைக்காக மீண்டும்அழைத்துச் சென்றனர்.