tamilnadu

நிலத்தடி நீரை முறைகேடாக பயன்படுத்தும் மினரல் வாட்டர் நிறுவனம்

ஈரோடு,செப் 9- நிலத்தடி நீரை முறைகேடாக பயன்படுத்தும் மினரல் வாட்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாநகராட்சி 31 வது வார்டு அண்ணாநகர் வீரப்பம்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வி.ஸ்ரீ காந்தி என்பவர் வீரப்பம்பாளையம் புறவழிச்சாலையில் எஸ்.கே.ஒய் என்ற மினரல் என்ற பெயரில் தண்ணீர் விற்பனை செய்வதற்காக 5 முதல் 6 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை எடுத்து வருகிறார். இதனால் அப்பகுதியைச் சுற்றியுள்ள டெலிகாம் அவென்யூ, தாய் நகர், ராஜேஸ்வரி நகர், வீரப்பம்பாளையம், கரட்டாங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இன்றி வேதனை அடைந்துள்ளனர்.  மேலும், இந்நிறுவனம் சுத்திகரித்தது போக மீதமுள்ள கழிவுநீர் மீண்டும் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் விடப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் தொடர்ந்து மாசடைந்து வருகிறது. ஆகவே, இந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் திங்களன்று மனு அளித்தனர்.