ஈரோடு, மே 20-அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு புதுக்காடு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் இப்பகுதி மக்களுக்கு தினந்தோறும் ஆற்று குடிநீர் மற்றும் ஆழ்துளைக் கிணற்று தண்ணீரையும் வழங்கி வந்தது. இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக ஒரு நாளைக்கு 5 நிமிடம் மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. மாலை நேரத்தில் விநியோகிக்கப்பட்ட குடிநீர் தற்போது காலை நேர விநியோகமாக மாற்றப்பட்டது. எனவே அப்பகுதி மக்கள்கூலி வேலைக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் திங்களன்று காலை அத்தாணியில் இருந்து கோபி செல்லும் சாலையில் பவானி ஆற்றுப் பாலம் அருகில் மூங்கில் தட்டிகளைக் சாலையின் குறுக்கே வைத்து மறியலில் ஈடுபட்டனர். காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் அந்தியூரில் இருந்து அத்தாணி வழியாக கோபி செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த ஆப்பக்கூடல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பேரூராட்சி நிர்வாகத்திடம் பேசி குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.