திருவனந்தபுரம், ஜுலை 28- நாட்டிலேயே கேரளத்தில்தான் கோவிட் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் மிகக் குறைந்த மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: கேரளத்தில் தற்போது 101 முதல் நிலை கோவிட் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 12,801 படுக்கைகள் உள்ளன. தற்போது இந்த மருத்துவமனைகளில் 45 சதவிகித நோயாளிகள் உள்ளனர். இரண்டாவது கட்டத்தில் 201 முதல் நிலை மருத்துவமனைகள் அமைக்கப்படும். இங்கு 30,598 படுக்கைகள் அமைக்கப்படும். மூன்றாவது கட்டத்தில் 36,400 படுக்கைகள் கொண்ட 480 முதல்நிலை மருத்துவமனைகள் தொடங்கப்படும்.கேரளத்தில் நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. சுகாதாரத் துறையினர், பத்திரிகை அதிபர்கள் உள்பட பல துறைத் தலைவர்களுடன் நடந்த ஆலோசனையில் தற்போதைய சூழ்நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம் என்றும், நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது
நீண்டகாலத் தடுப்பு நடவடிக்கைகள்
சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்களே நோய் பரவக் காரணமாக இருப்பது வேதனை அளிக்கிறது. இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் சில நாட்களிலோ, சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ முடிவடைய வாய்ப்பில்லை. எனவே இதற்காக நீண்டகால தடுப்பு நடவடிக்கைகள் குறித்த திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். திருவனந்தபுரம் மாவட்டத்தில் சில பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு ஊரடங்கு சட்ட நிபந்தனைகளைத் தளர்த்தலாமா என்பது குறித்து ஆலோசிப்பதற்காகத் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் தற்போது 2,723 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சைப் பிரிவிலும், ஒருவர் வெண்டிலேட்டரிலும் உள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட வயதானவர்கள் கோவிட் நல மையத்திற்கு மாற்றப்படுவார்கள்.
நோய் தடுப்பில் கேரளம் முன்மாதிரி
தனிமையில் இருப்பவர்களின் வீடுகளில் பலருக்கு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வீடுகளில் இருப்பவர்கள் உடனடியாக முதல் நிலை சிகிச்சை மையத்திற்கு மாற்றப்படுவார்கள். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் கேரளா மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. நமது மாநிலத்தில் நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதே இதற்கு காரணமாகும். எனவே மற்ற மாநிலங்களும் கோவிட் நோய் சிகிச்சையில் கேரளாவைப் பின்பற்றி வருகின்றன. இங்கு அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சை காரணமாகத்தான் மரண எண்ணிக்கை குறைந்துள்ளது. ஜூலை 26ஆம் தேதி வரை கேரளத்தில் மொத்தம் 61 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் 40 பேர் ஆண்கள், 21 பேர் பெண்கள் ஆவர். இதில் திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 11 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தோரில் 20 பேர் 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள். 18 பேர் 70 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்கள். 80 வயதுக்கு மேல் 3 பேர் உள்ளனர். 9 பேர் 50 வயதுக்கும் 60 வயதுக்கும் உட்பட்டவர்கள். 10 வயதுக்குக் கீழ் உள்ள ஒருவர் மரணமடைந்துள்ளார். இறந்தவர்களில் 39 பேருக்குக் கோவிட் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியது. 22 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். கேரளத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவிட் முதல் நிலை சிகிச்சை மையங்களில் இலவச சிகிச்சையுடன் இலவசமாக உணவும் வழங்கப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பு
கோவிட் சிகிச்சையில் கேரள தனியார் மருத்துவமனைகள் அரசுடன் சிறப்பான முறையில் ஒத்துழைக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொது வார்டுகளில் ரூ.2,300, அவசர சிகிச்சைப் பிரிவில் ரூ.6,500, வெண்டிலேட்டர் அவசர சிகிச்சைப் பிரிவில் ரூ.11,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே கேரளாவில்தான் தனியார் மருத்துவமனையில் மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.