திருவனந்தபுரம்:
சபரிமலைக்கு பத்துக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள பெண்கள் செல்வதற்கு கேரள உயர்நீதிமன்றம் 1991இல் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக 2006 ஜுலை 28இல் இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. இந்த மனு, பிரபல சங்பரிவார் செயற்பாட்டாளரின் சிந்தனையில் உதித்தது என்பது பின்னர் தெரியவந்தது. இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பக்தி பஸ்ரிஜா சேமி மற்றும் பிரேரண குமாரி, லட்சுமி சாஸ்திரி, அல்கா சர்மா, சுதா லால் ஆகியோர் ஆர்எஸ்எஸ் தொடர்புள்ள வர்கள் என்பது பின்னர் தெரியவந்தது. தானும் தனது கணவரும் ஆர்எஸ்எஸ் தொடர்பில் இருப்பவர்கள் என பிரேரணகுமாரி ஒப்புக்கொள்ளவும் செய்தார்.
வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது 2007 நவம்பரில் வி.எஸ்.அச்சுதானந்தன் தலைமையிலான எல்டிஎப் அரசு வாக்குமூலம் அளித்தது. எதிர்த்தரப்பாக கேரள அரசு சேர்க்கப்பட்டதால் இந்த வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் நீண்டகாலத்துக்கு பிறகு 2016 ஜனவரியில் கே.ராமமூர்த்தியை ‘அமிக்கஸ் கியூரியாக’ நீதிமன்றம் நியமனம் செய்தது. இவர் பெண்கள் சபரிமலையில் நுழைவதற்கு எதிரான நிலைபாடு கொண்டவர். அப்போது அதிகாரத்தில் இருந்த உம்மன்சாண்டி அரசும் அதே நிலைபாட்டை கொண்டிருந்தது. அதனால் 2016 பிப்ரவரி 5இல் பெண்கள் சபரிமலை செல்வதற்கு எதிராக அந்த அரசு வாக்குமூலம் அளித்தது. இடதுசாரி அரசின் வாக்குமூலத்தை திரும்பப் பெற முயன்றது. அதே மாதத்தில் வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரனை அமிக்கஸ் கியூரியாக நீதிமன்றம் நியமித்தது. அவர் பெண்கள் சபரிமலை செல்வதற்கு சாதகமாக செயல்பட்டார்.அதே ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு அதிகாரத்துக்கு வந்தது. 2007இல் வி.எஸ்.அச்சுதானந்தன் அரசு அளித்த வாக்குமூலத்தையே 2017 நவம்பரில் பினராயி அரசு உறுதி செய்து நீதிமன்றத்தில் அறிவித்தது. இந்நிலையில் 2017 அக்டோபர் 13இல் அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கு விசாரணையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 2018 ஜுலை 17இல் விசாரணை தொடங்கிய இந்த வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 29இல் கூறப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், 1965 கேரள இந்து வழிபாட்டு அங்கீகாரச் சட்டத்தின் 3 பி பிரிவையும் ரத்து செய்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சுமார் 56 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 2019 பிப்ரவரி 7ஆம் தேதி அவற்றின் மீதான விசாணை நடந்தது. தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பு வியாழனன்று (நவ.14) வழங்கப்பட்டது.