தஞ்சை மாவட்டம் கும்பகோணம்அருகே திருபுவனம் நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதியாகும். திருபுவனத்தில் உள்ள சன்னதி தெருவில் தீக்கோ, சோழன் மற்றும் திருவள்ளுவர் என வரிசையாக 3 தொடக்கப் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அற்றின் நிர்வாகக்குழு தேர்தல் கடந்த 9.5.18ம் தேதி நடைபெறும் என்றும், அதற்குரிய வேட்புமனு 30.4.18 அன்றுபெறப்படும் என்றும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.வேட்புமனு தாக்கல் நாளான 30.4.18அன்று ஒரே தெருவில் அமைந்துள்ள தீக்கோ, சோழன் மற்றும் திருவள்ளுவர் ஆகிய கூட்டுறவு சங்கங்களுக்குஉரிய தேர்தல் அதிகாரி வேட்புமனுவைபெற்று கொள்ள சங்கங்களுக்கு வரவே இல்லை. அதுமட்டுமல்லாது வேறு இடத்தில் இருந்து கொண்டு ஆளும்கட்சி அதிமுக சார்புடைய கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் வேட்புமனுவை மட்டும் பெற்றுக் கொண்டதாக தகவல் பரவியது. இதன் அடிப்படையில் ஒரே தெருவில் உள்ள 3 சங்கங்களின் வேட்பாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள், திமுக உறுப்பினர்கள் சுமார் 200 நபர்கள் தெருவின் பிரதான நுழைவு வாயிலான தீக்கோ கூட்டுறவு சங்கம் அருகேசாலை மறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்ய உள்ளூர் காவல்துறையினரும், வட்டாட்சியர் ராஜேஸ்வரியும் களத்திற்கு வந்தனர்.
தேர்தல் அதிகாரி வேட்புமனு பெறுவதற்கு வராதது குறித்து உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு புகாரும் அனுப்பப்பட்டது. புகாரினை விசாரணை செய்த தேர்தல் ஆணையம் தீக்கோ கூட்டுறவு சங்க தேர்தலினை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால் திருவள்ளுவர், சோழன் ஆகிய கூட்டுறவு சங்கங்களில் மேற்படிமோசடியான முறையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சோழன்- திருவள்ளுவர் கூட்டுறவுசங்கத்தின் தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தஉறுப்பினர்களுக்கு புதிய நெசவு பணிகள் வழங்காமல் புதிய நிர்வாகிகள் பழிவாங்கும் அராஜகப் போக்கு தொடர்ந்து வந்தது. இதனால் அன்றாடச் செலவுகளுக்கே சிரமப்பட்டாலும் சோழன்- திருவள்ளுவர் சங்கத்தின் தேர்தலினை ரத்து செய்ய கொடுத்தபுகார் மனுவின் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் காரணமாக திருச்சிராப்பள்ளியில் உள்ள 2018 கூட்டுறவு சங்க தேர்தல் வழக்குகள் கிழக்கு மத்திய மண்டலக்குழு சிறப்பு நீதிமன்றத்தில் சோழன்- திருவள்ளுவர் கூட்டுறவு சங்க தேர்தல் புகாரும் வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.சோழன் கூட்டுறவு சங்க உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, வெங்கட்ராமன், ராஜாராமன், அழகப்பன், பாண்டியன் ஆகியோரின் மனு எண்கள் 07/2018, 8/2018, 27/2018, 28/2018, 29/2018 எனவும் திருவள்ளுவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கம்பன், கார்மேகம், துளசி ஆகியோரின் மனு எண்கள் 30/2018, 31/2018, 32/2018 எனவும் தேர்தல் வழக்குகள் நடந்து வந்தன. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் வி.ரங்கராஜன் மற்றும் அவரது ஜூனியர் பிரேம்குமார் ஆஜராகி வழக்கினை நடத்தி வந்தனர்.
சங்கங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா உள்ளபடியால் வேட்புமனு தாக்கல் நாளன்று உள்ள பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. அன்றைய தின பதிவுகள் யாவும் அழிந்து விட்டது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் பதில் அளித்தனர். கூட்டுறவு சங்கத்தின் சார்பாக திருச்சி மாவட்ட அரசு தலைமை வழங்கறிஞர் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சார்பாகவழக்கறிஞர் என 3 வழக்கறிஞர்களும் ஒரே நேர்கோட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஒன்றிணைந்து களத்தில் நின்றதை வெளிப்படையாக காண முடிந்தது.வேட்புமனு தாக்கல் நாளன்று நடந்த சாலை மறியலின்போது சமரசம்மேற்கொள்ள களத்திற்கு வந்த வட்டாட்சியர் ராஜேஸ்வரியை அழைத்து விசாரிக்க நீதிமன்றத்திடம் மனுதாரர்கள் சார்பில் கோரப்பட்டது. வட்டாட்சியரை விசாரிக்காமல் தடுக்க எதிர்தரப்பினர் வெவ்வேறு விதங்களில் தாமதப்படுத்தினர். ஆயினும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் நீதிமன்றத்தில் ஆஜராகி நடந்த உண்மைகளை தெளிவுபட சாட்சியம் அளித்தார்.
கூட்டுறவு தேர்தல் ரத்து
எதிர்தரப்பின் குறுக்கு விசாரணையில் தீக்கோ கூட்டுறவு சங்கம் அருகில்மறியல் நடந்ததால் தீக்கோ கூட்டுறவு சங்கத்தில் மட்டுமே தேர்தல் அலுவலர் வராததால் பிரச்சனை ஏற்பட்டதுஎன திசை திருப்பப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில் தீக்கோ, திருவள்ளுவர்மற்றும் சோழன் ஆகிய 3 சங்கங்களிலும் தேர்தல் அலுவலர் வராத காரணத்தால் அப்பகுதியின் பிரதானவாயில் முன்பு மறியல் நடைபெற்றதுஎன்பது வட்டாட்சியர் மூலம் நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் அன்று நடைபெற்ற மறியல் போராட்டம் தொடர்பாக தீக்கதிர் நாளிதழில் வெளிவந்த விரிவான செய்தி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆளும் கட்சியின் செல்வாக்குமிக்க நபர்கள்கைகோர்த்துக் கொண்டு எதிர்தரப்பினராக இருந்த போதிலும் மனுதாரர்கள் தரப்பின் நியாயம் நீதிமன்றத்தின் தீர்ப்பில் அங்கீகரிக்கப்பட்டது.நீதிமன்றம் 10.5.19 அன்று அளித்துள்ள தீர்ப்பில் திருவள்ளுவர்- சோழன் ஆகிய கூட்டுறவு சங்கங்களுக்கு நடந்த தேர்தலை ரத்து செய்தும், மேலும் வருகிற 3 மாதத்திற்குள் மறு தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டது. ஆளும்கட்சியினரின் அராஜகங்களுக்கு நீதிமன்றம் தந்துள்ள மற்றொரு குட்டு இதுவாகும். மேலும் ஜனநாயகம் காத்திட கூட்டுறவு சங்கதேர்தல் நடைமுறைகளில் தேவையான மாறுதல்கள் செய்ய வேண்டிய காலமும் இதுவாகும்.
கட்டுரையாளர் : திருச்சி மாவட்டச் செயலாளர் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்