tamilnadu

img

வாயு புயலால் குஜராத்திற்கு பாதிப்பு கிடையாது - வானிலை ஆய்வு மையம்

அரபிக்கடலில்  உருவான வாயு புயலால் குஜராத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் குஜராத்தில் இன்று காலை கரையை கடக்கிறது. அப்போது 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குஜராத்தில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 10 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 400 கிராமங்களை சேர்ந்த 2.91 லட்சம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையின் 36 கம்பெனி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 10 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. முப்படைகளும், கடலோர காவல்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 9 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 

இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி மனோரமா மொகந்தி அகமதாபாத் நகரில் கூறும்பொழுது, வாயு புயலால் குஜராத்தில் பாதிப்பு ஏற்படாது.  அது வெராவல், போர்பந்தர், துவாரகா நகர் வழியே கடந்து செல்லும்.  வேகமுடன் பலத்த காற்று வீசும்.  கனமழையும் பெய்ய கூடும். கடலோர பகுதிகளில் இதன் தாக்கம் காணப்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.