அகமதாபாத்:
மத்தியில் தனிப்பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்றுள்ள பாஜக, தன்னுடைய அடங்காத அதிகார வெறி காரணமாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.குறிப்பாக, கர்நாடகா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சி எம்எல்ஏ-க்களை கொத்தாக பாஜக-வுக்கு கொண்டு வருவதன் மூலம், தேர்தலைச் சந்திக்காமலேயே அதிகாரத்தில் அமரும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அதுமட்டுமல்ல, குஜராத்தில் பாஜக-தான் ஆட்சியில் இருக்கிறது. ஆனால், இங்கும் எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை பாஜக-வுக்கு இழுக்கும் வேலைகள் நடந்து வருகின்றன.
குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 15 பேர் விரைவில் அக்கட்சியில் இருந்து விலகுவார்கள் என்று, குஜராத் மாநில பிற்படுத்தப்பட்டோர் சமூக தலைவர் அல்பேஷ் தாக்குர் கூறியுள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் அல்பேஷ் தாக்குர், மக்களவைத் தேர்தலின்போது, திடீரென காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். காங்கிரஸ் எம்எல்ஏ-க்களான தவல்சின் தாக்குர், பரத்ஜீ தாக்குர் ஆகியோரும் தங்களின் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, அல்பேஷூடன் வெளியேறினர். இந்நிலையில் குஜராத் துணை முதல்வர் நிதின் படேலை சந்தித்து பேசியதற்குப் பின், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ள அல்பேஷ் தாக்குர், “குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். இன்னும் 15 எம்எல்ஏ-க்கள் விரைவில் அக்கட்சியில் இருந்து விலகுவார்கள்” என்று கூறியுள்ளார். அதேநேரம், பாஜக-வில் தான் இதுவரை இணையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.