இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு பாகிஸ்தான் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தின் போது தொடைப் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. மருத்துவ அறிக்கைப்படி அடுத்த 3 போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் புவனேஸ்வர் குமார் காயத்திலிருந்து குணமடைந்துவிட்டாலும், உடற்தகுதியில் சிக்கல் உருவாகியுள்ளது. 2 தினங்களுக்கு முன்பு சவுதாம்ப்டனில் உள்ள விடுதியின் படிகளில் ஏறும் போது புவனேஸ்வர் குமாரால் இயல்பாக நடக்க முடியவில்லை. இருப்பினும் ஒருவாரத்தில் புவனேஸ்வர் குமார் முழு உடற்தகுதியை அடைவார் என்று இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் மற்றும் ரஞ்சி போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனியை இங்கிலாந்திற்கு உடனடியாக திரும்புமாறு இந்திய அணி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. புவனேஸ்வர் குமாரின் இடத்தை முகமது ஷமி சிக்கல் இல்லாமல் சமாளித்து வருவதால் நவ்தீப் சைனி ஆடும் லெவனுக்கு தேவையில்லை என்றாலும் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.