வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் சைப் ஹசன் விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியிருந்ததால் நிலையில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சமீபத்தில் வங்க தேச கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வங்கதேச கிரிக்கெட் அணி இரண்டிலும் தோல்வியையே சந்தித்தது. இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய பிறகு, வங்ச தேச அணியில் ஒரு பகுதியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டாக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். சைப் ஹசன் உள்ளிட்ட சிலருக்குத் திங்கட்கிழமை காலை விமான டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது. அதன்படி கொல்கத்தா விமான நிலையத்துக்கு திங்கட்கிழமை சென்ற அவரது பாஸ்போர்ட்டை, குடியேற்ற அதிகாரிகள் பரிசோதித்தபோது, அவரது விசா முந்தையை நாளே முடிவடைந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை குடியேற்ற அதிகாரிகள் விமானத்துக்குச் செல்ல அனுமதி மறுத்தனர். இதுபற்றி வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு அவர் புகார் செய்தார். பின்னர், டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் அவருக்கு புதிய விசாவை நேற்று வழங்கியது. விசா காலம் முடிந்தும் தங்கியதால், அவருக்கு ரூ.21,600 அபராதமாக விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்திய பின்னர், அவர் சொந்த ஊருக்கு விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.